Montag, August 11, 2003

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்......கு.தீபா

இன்று பல்துறைகளிலும் பெண்கள் கல்வியறிவு, சிறப்புத்தேர்ச்சிபெற்று தன்னிகரற்று விளங்குகின்றார்கள். நாட்டை ஆட்சிசெய்யும் தலைவர்களாய், தொழிற்துறை விற்பன்னர்களாகவும், விண்வெளியிலும்கூட உலகப் பெண்கள் சாதனைபடைக்கின்றார்கள். மேலும் பெண்களின் வீரவரலாறுகளின் சான்றுகளாய் களமுனைகள் விரிகின்றன.
ஒருபகுதிப் பெண்கள் அறிவு, தேடல், சாதனை என சிகரங்களில் ஏறிக்கொண்டேபோக, இன்னுமொரு பகுதியினரோ அடிநிலையில் வேதனையில் அழுந்தி அழுந்தி மீட்சியின்றி இரண்டாந்தரப் பிரஜைகளாகலு}..
போருக்கும் அதன் மறைமுக விளைவான பொருளாதார சமூகத் தாக்கங்களுக்கும் நேரடியாக முகங்கொடுக்கும் பெண்கள், இன்னும் புரிந்துணர்வின்மையால் அனுபவிக்கும் கொடுமைகள் பல. இப்புரிந்துணர்வின்மை ஆண்களிடமிருந்து மட்டுமல்லாமல் பெண்களிடமிருந்தும் வெளி ப்படுவதுதான் வேதனையான உண்மை. பாதிப்பிற்குள்ளாகி வேதனையில் அழுந்திப்போகும் பெண்களுக்கு உளாPதியான ஆதரவை வழங்குவதன் மூலம் பெண்கள் தங்களைச்சுற்றிக் கீறப்பட்ட குறுகிய வட்டங்களிலிருந்து புதுப்பலத்துடன் வெளிவரலாம்.
புறத்திருந்து கொலை, பாலியல் வல்லுறவு என எதிரி துன்புறுத்த உள்ளிருந்து தெளிவற்ற சிந்தனை, புரிந்துணர்வின்மை போன்ற எதிரிகள் பெண்களை அடிமைப்படுத்த இனியும் நாம் சகித்துக்கொள்ள வேண்டுமா?
இதன் விழிப்புணர்விற்கான முதல்த்தேவை எம் சமூகத்தில் எமது பெண்கள் அனுபவிக்கும் இலைமறை காயாக வெளிவராமல் மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்தலும், ஏன்? எதற்கு? எப்படி? எனத் தீர்விற்கான வழிகாணலுமேயாகும். அதற்காக வேண்டி என் வாழ்வின் பயணத்தில் அண்மைய நாட்களில் என் மனதைக் கீறிய சில சம்பவிப்புக்களை உங்கள் முன் வைக்கின்றேன்.
அந்த மருத்துவமாதுவைச் சீண்டிக் கதைக்க வைப்பதினால் நான் அடையும் பலன்கள் பல. இன்றும் அவவைத் தூண்டினால் ஏதாவது பிரயோசனமான விடயம் காதில் விழும் என எண்ணியவாறே, படலையைத் திறந்தபோது 'உந்தப் பொம்பிளைக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்' எனும் வார்த்தைகள் காதில் விழுந்தன.
'என்னக்கா என்ன பிரச்சினை?' என்றேன். 'அதுதான்லு}. அந்த மல்லாவி ஆஸ்பத்திரியில நடந்தது. உங்களுக்குத் தெரியாதென்றால் நான் நம்பமாட்டன்'
எனக்குத் தெரிந்திருக்கவேகூடும் எனினும், தெரியாததுபோல் நடிப்பதில் வெற்றிகண்டேன். 'எங்கடை ஊர்ப்பிள்ளையொன்று இன்றைக்குப் பத்தொன்பது வயதுதான் இருக்கும். மல்லாவி ஆஸ்பத்திரியிலை கர்ப்பப்பையை எடுத்திட்டினமாம்'
அனுதாபத்தைவிட மேலதிகமாகத் தொனித்த அருவருப்பை மனதில் கணித்தபடியே 'அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது?' என வினவினேன். 'அவவும் மச்சான்காரப் பொடியனும் விரும்பி இருந்தவை. இரண்டு வீட்டாரும் உடன்பட்டு கல்யாணம் செய்துவைக்க இருந்தவை. பொடியனுக்கு வீட்டிலை பொறுப்பு இருக்குதென்று கொஞ்ச நாள் பின் தள்ளிப்போட்டால் அதுக்கிடையிலை அவவுக்கு வயிற்றிலை பிள்ளை. ஊரிலை யாரோ ஒரு நாட்டு வைத்தியரிட்டை கருக்கலைப்புச் செய்யப்போயிருக்கினம். அந்தாள் என்னத்தாலையோகுத்த அது கருப்பையைக் கிழிச்சுப்போட்டுதாம் ஒரே இரத்தப்போக்கோடை மயங்கின நிலையிலை பிள்ளையை மல்லாவி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனா கர்ப்பப்பையை எடுக்கவேணும் எண்டு சொல்லிப்போட்டினமாம்' வலுவாக மனதைத் தாக்கிய வேதனையின் கனத்தில் மௌனமாக இருந்தேன். 'என்ன நீங்கள் கவலைப்படுறியள் போலை. அறிவில்லாமல் நடக்கிறவைக்கு உதுவேணும். நீங்கள் ஏன் யோசிக்கிறியள்?'
பத்தொன்பது வயதில் இனி வாழப்போகும் காலம் முழுவதும் வேதனையைத் தரும் கொடுமையை அனுபவித்து, இத்தகைய பழிச்சொற்களைக் கேட்டு, பெண்மையின் உச்ச நிலையான தாய்மை மறுக்கப்பட்டு,உள உடல் வேதனைக்காளாகித் தவிக்கும் அப்பெண்ணிற்கு இத்தகைய வார்த்தைகள் எதை வழங்கும்? இப்பொழுது அவளுக்கு என்ன தேவை? அன்பு, ஆதரவு, இம்மண்ணில் உள உரம் கொண்டு வாழ்வதற்கான வழிகாட்டல் இவற்றை வழங்குவது யார்? கேள்விகள் அலைமோத 'அக்கா அந்தப்பெண் அவளின் வாழ்க்கை, அவளின் குழந்தை பெறும் உரிமை இதையெல்லாம் நீங்கள் யோசிக்கேல்லையோ?' என்று மெதுவாகக் கேட்டேன். 'நாங்கள் யோசிச்சு? அவையெல்லோ யோசிச்சிருக்கவேணும். கல்யாணம் செய்யாம அவவுக்கு அவனோடை என்ன உறவு?'
உண்மையாகவே இருக்கலாம். எனினும் முழு மனதோடல்லாமல் நிர்ப்பந்தம் காரணமாகவே தனக்குக் கணவனாகப் போகிறவனின் விருப்பிற்கிணங்க வேண்டிய தேவை அப்பெண்ணிற்கு இருந்திருக்கலாம். ஒரு பெண் விரும்பாமலே, அவளின் சம்மதமின்றியே நிகழக்கூடிய ஒரு நிகழ்விற்கு அவளையே காரணமும் காரியமுமாக்கி, அறியாமையால் தன்னைத் தொலைத்து நிற்கும் பெண்ணிற்கு வார்த்தைகளில்கூட ஆறுதல் சொல்லவிரும்பாத, புரிந்துகொள்ளவிரும்பாத சமூகம், குறிப்பாகப் பெண் சமூகம்லு} முள்ளாய் நெஞ்சில் உறுத்தப் புறப்பட்டேன், அப்பெண்ணைத் தேடி.
-0-
வானத்தில் விமானங்களின் இரைச்சல். அண்ணாந்து பார்த்தவாறு நின்ற எனக்கு அருகில் யாரோ பெரிதாக மூச்சுவிடுவதுகேட்டது. திரும்பிப்பார்த்தேன். வேகவேகமாக மூச்சுவிட்டவாறு அகலவிரிந்த கண்களுடன் அப்பெண் அலங்கமலங்க வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 'அம்மா' என்ற எனது அழைப்பு காதில் விழாதது போலிருந்த அவள் திடீரென்று எதையோ முணுமுணுத்தாள். 'ஐயோ பொம்மர்லு} என்ரை பிள்ளைலு} ஐயோ பொம்மர்' எனச்சீரான ஒரு ஒழுங்கில் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டே தனது வயிற்றை இரு கைகளாலும் பொத்தியபோதுதான் அவள் கர்ப்பிணி என்பதை அறிந்தேன். ஐந்து ஆறு மாதக் கர்ப்பம் இருக்கும். பயந்துவிட்டாளோ அல்லது வீட்டில் விட்டு வந்த குழந்தையை எண்ணிப் பயப்படுகிறாளோ என எண்ணியவாறே 'அம்மாலு}' என அழைத்த வண்ணம் தோளில் கைவைத்தேன். திகைத்துத் திரும்பி என்னைப் பார்த்தவள், என் கண்களில் தெரிந்த கனிவினால் தெளிந்து விம்மியவாறே என்தோளில் சாய்ந்தாள். பதறி நடுங்கிய அவளை அணைத்து மெதுவாகத் தட்டிக்கொடுத்தேன். விமானங்களும் போய்விட்டன. அருகிலிருந்த பானையிலிருந்து எடுத்துக்கொடுத்த நீரை அருந்தியவளிடம் சிறு சிரிப்புடன் 'என்னம்மா பொம்மர் என்றால் பயமோ?' எனக் கேட்டேன்.
இலகுவான உரையாடலைத் தொடக்கவிரும்பிய என் எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் விக்கிவிக்கி அழத்தொடங்கியவளைத் தேற்ற முயன்று தோற்று அழுது தீர்க்கட்டும் என எண்ணியவாறே ஆதரவுடன் கைகளைப் பற்றினேன். அழுது முடித்தவள், 'தங்கச்சி எனக்கு பொம்மர் என்றால் பயம்தான். இரவிலைகூட நித்திரை கொள்ள ஏலாம மூன்று வருசமா பயங்கரக் கனவுதான். கழுகு வந்து என்ரை பிள்ளையைக் கொண்டு போறதுபோலை'
'உங்களுக்கு எத்தனை பிள்ளைகளம்மா?' எனக்கேட்டபோது
'இதுதான் முதல்பிள்ளை' எனும் அவளின் பதிலில் குழம்பினேன். என் குழப்பம் விளங்கியவள்போல 'மூன்று வருசத்துக்கு முதல் நிறை மாசத்தோடை கடைசிக் கிளினிக்குக்கு வந்தன். இதுதானம்மா உங்கட கடைசிக் கிளினிக். அடுத்த மாசம் குழந்தைப்பிள்ளைக் கிளினிக்கிற்கு பிள்ளையைக் கொண்டு வாங்கோ என்று சந்தோசமா மிட்வைமாh சொல்லிச்சினம். நான் கிளினிக்கைவிட்டு படியிறங்க பொம்மர் வந்தது. திடீரென்று வந்து திடீரென்று பதிஞ்சான். ஓடிப்போய் வாசலிலை இருந்த பங்கருக்கை குதிச்சன், பொம்மர் போய் வெளியிலைவருமட்டும் எனக்கு வயிறுநொந்தது தெரியவேயில்லை. சரியா நொந்துச்சுது. அதுக்குப்பிறகு இரண்டு மூன்றுநாள் பிள்ளையும் துடிக்கேல்லை. வயிறு நோகுது என்று ஆஸ்பத்திரிக்குப் போனன்லு}.' முடிக்காமலே அவள் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.
'என்னம்மா பிறகு என்ன நடந்தது. ஏன் அழுறியள்?' என நான் பரபரத்தேன்.
'அங்கைலு} அங்கை என்ரை குழந்தை செத்துப்போச்சுது என்று சொல்லிப்போட்டினம். உடனேயே ஊசிபோட்டுப் பெறவைச்சினம். தலையில ஒரு கண்டலோட வெள்ளைவெளேரென்று வடிவான பொம்பிளைப்பிள்ளையொன்று உயிரில்லாமல் பிறந்ததம்மா. பங்கருக்கை குதிக்கேக்கை வயிறடிபட்டு பிள்ளை செத்துப்போச்சுதாம். நான் ஒன்பது மாசமா எவ வளவு கஸ்ரப்பட்டு அந்தப் பிள்ளையைச் சுமந்தன். செத்துப்போன பிள்ளையை நான் பெறேக்கை என்ரை மனமும் உடம்பும் பட்ட வேதனையைவிட அந்தக் குழந்தை செத்தது என்னாலைதானென்று என்ரை அவரும் மாமியும் இந்த மூன்று வருசமும் என்னைப் படுத்தினபாடு.. ஐயோலு} என்ரைபிள்ளைலு} கடவுளே என்ரபிள்ளை' எனப்பெருங்குரலெடுத்து அலறியவாறே வயிற்றைப்பிடித்த வண்ணம் 'இந்தப் பிள்ளையையும் கொல்லப்போறாங்கள்லு} ஐயோ இந்தப் பிள்ளையை நான் விடமாட்டேன்லு} விடமாட்டேன்' என அலறிக்கொண்டு மயங்கியவளைக் கவனித்து முதலுதவி வழங்கி, வேண்டிய உதவிகளைச் செய்து வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு நடக்கத் தொடங்கிய என் மனதில் வேதனைப் பேரலைகள்.
குண்டு போடாமலே என்னால் கொல்ல முடியுமென்று எதிரியவன் நிரூபிக்க, சொற்களாலேயே எங்களால் வதைக்க முடியுமென உற்றவர்கள் நிரூபிக்க, உடலும் உளமும் நொந்து மனோவியாதிக்குள்ளாகும் நிலையிலிருக்கும் இப்பெண்ணை மீட்டு எடுப்பது யார்? காலமாவது அவளின் வேதனைத்தீயை ஆற்றுமா?
-0-
'கடவுளே! இந்தப் பச்சைப் பாலகனுக்குக் கொடுக்கப் பாலில்லையே' எனும் அரற்றலைக் கேட்டவாறே உள் நுழைந்த எனக்கு அது தென்பட்டது. குழந்தை வீறிட்டலறிக்கொண்டிருந்தது. அதனை, வெறித்துப் பார்த்தவாறே செயலற்றிருந்தாள் அந்தப்பெண். அருகில் அவள் தாய், அவள்தான் அரற்றியிருக்கவேண்டும்.
என்னைக் கண்டதும் சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தவாறே எழுந்து வந்தாள் அவள். 'வாம்மாலு} உள்ளை வா' என்ற குரலில் தொனித்த வேதனை என்னை நெருடியது. 'என்னம்மா என்ன பிரச்சினை' என்றவாறே கதிரையில் அமர்ந்தேன்.
மீண்டும் விசும்பத்தொடங்கியவள் தன்னைக் கட்டுப்படுத்தியவாறே 'இந்த வீட்டிலை நடக்கிறது எந்த வீட்டிலையாவது நடக்குமே பிள்ளை. ஒவ வொரு வீட்டிலயும் குழந்தை பிறக்கிறதெண்டா எவ வளவு சந்தோசம். அதுவும் முதல் குழந்தையென்றா சொல்லத் தேவையில்லை. ஆனா இந்த வீட்டிலைலு}' என்றவள் திரும்பவும் அழத்தொடங்கினாள். உள்ளே மகளும் விசும்பும் ஒலிகேட்டது. அழுகையில் வேதனையைத் தீர்க்கட்டுமென எண்ணி மௌனமாக இருந்தேன். அழுது ஓய்ந்தவள் 'பிள்ளைப் பெத்தவள் சாப்பிட வீட்டிலை ஒண்டுமில்லை. இரண்டு கிழமையா முருங்கைக்காயும் வெறும் சரக்குத் தண்ணியும்தான் பிள்ளை சாப்பாடு. இதைச் சாப்பிட்டா நல்லாப் பால் வருமே?'
'ஏனம்மா ஏதாவது காசுக் கஸ்டமே' என்றேன். 'அப்பிடியெண்டாக்கூட கடவுள்விட்ட வழியென்று இருக்கலாம் பிள்ளை. ஆனால், சுளையா ஐயாயிரம் சம்பளம் எடுக்கிற வீட்டிலை என்ரை பிள்ளைக்குச் சாப்பிட ஒன்றுமில்லை'
'கடை தெருவுக்குப் போக ஆளில்லாமலு}.' மெல்ல இழுத்தேன். 'வெளியிலை சொன்னாவெட்கக்கேடு. வெறும் கஞ்சத்தனம்தானம்மா, முட்டையோ மீனோ கண்ணிலையே காட்டேல்லை. வெறும் சரக்குத்தண்ணியோட உடம்பு எப்படித்தேறும்?' நான் ஏற்கனவே அறிந்தேயிருந்த இவ விடயத்தின் உண்மைத்தன்மை, விசும்பல்களால் உரமாய் நெஞ்சில் அறைய கையிலிருந்த பொருட்களைத் திண்ணையில் வைத்துவிட்டு 'பிறகு வாறனம்மா' என வெளிநடந்தேன்.
இப்படியொரு கொடுமையா? கட்டிய மனைவியின் வயிற்றில் அடிக்கும் அளவு ஆதிக்க உணர்வா அந்த ஆணிடம்? கஞ்சியோ கூழோ பகிர்ந்தருந்தி மகிழ்ந்திருக்க வேண்டிய மணவாழ்க்கையில் உணவினாலேயே பெண்ணை வஞ்சிக்கும் நம்புதற்கரிய கொடுமையா?
தன் கையில் பொருளாதாரப் பலமின்றி, தன் ஒருவேளை உணவையே கட்டுப்படுத்தும் கணவனிடம் கையேந்த மனமின்றி மனமும் உடலும் வேதனையில் நொந்துலு} படித்திருந்தால்? வேலை வாய்ப்புப் பெற்றிருந்தால்? திருமணமே செய்யாதிருந்தால்? எனும் கேள்விக்கணைகளில் காலத்தைக் கடத்தி, பெண்ணே! இன்றும் இன்னும் இப்படியா?

Keine Kommentare: