Sonntag, Februar 22, 2004

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்...

கலாநிதி சந்திரலேகா வாமதேவா

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரான கோட்பாடல்ல. அது ஆண்களுக்குச் சமமாகச் சகல துறைகளiலும் சுதந்திரமாக பெண்கள் இயங்குவதை நோக்கமாகக் கொண்டது. அம்மாச்சி என்று அழைக்கப்படும் அமிர்தானந்தமயி அம்மையார் பெண்கள் பற்றி வழங்கிய கருத்துக்களில் சிலவற்றை இங்கு தருகிறேன். அமிர்தானந்தமயி அம்மா சில இடங்களில் ஆண்கள் பெண்களுக்கு ஏற்படுத்திய சில கட்டுப்பாடுகளால் அவர்களை சற்று கடுமையாகக் கூறுகிறார். ஆயினும் சுதந்திரம் என்பதைப் பெண்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதையும் அவர் எடுத்துக் கூறத் தயங்கவில்லை. அவரது கருத்துக்களுடன் இக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்

உலக அமைதிக்காக 2002 அக்டோபர் 6-ம் தேதி முதல் 9-ம் தேதிவரை ஆன்மீக பெண் தலைவர்களின் மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் நூற்றி இருபத்தைந்து நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான சமாதானத்துக்குரிய 'காந்தி கிங்' விருது மாதா அமிர்தானந்தமயிக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு அவர் 'பெண்ணே உன்னால் முடியும்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள். விகடன் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து இதனை உங்களுக்குத் தருகிறேன்.

உறங்கிக் கொண்டிருக்கும் பெண் சக்தி விழித்தெழ வேண்டும். இந்தக் காலகட்டத்தின் மிகவும் முக்கிய மான தேவைகளில் இது ஒன்றாகும். மதமும், ஆசாரங்களும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு, குறுகிய மனப்பான்மையால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்கள் என்ற நியதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழும் நாடுகளில் உள்ள பெண்கள், புதுமையான சிந்தனைகளைப் பெற வேண்டும். கல்வியறிவின் மூலமும், உலகியல் ரீதியான வளர்ச்சியின் மூலமும் பெண்ணும், அவளைச் சுற்றியுள்ள சமூகமும் விழிப்படையும், பண்பாடு வளரும் என்று நாம் கருதினோம். ஆனால், இந்த நம்பிக்கை தவறானது என்பதைக் காலம் தெளிவாக்கியுள்ளது.

பெண்ணை விழிப்புறச் செய்வது யார்? அவள் விழிப்படையத் தடையாக நிற்பது எது? உண்மையில் பெண்ணையும், அவளது பிறவிக் குணமான தாய்மை உணர்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. பெண்ணைப் பெண்ணே விழிப்புறச் செய்யவேண்டும். அதற்குத் தடையாக நிற்பது அவளுடைய மனமாகும்.

கடந்தகால சமூகம் படைத்த சட்ட திட்டங்களும், குருட்டு நம்பிக்கைகளும் இன்றும் பெண்ணுக்கு எதிராக நிலை பெற்றுள்ளன. சுரண்டுவதற்கும், அடக்கி ஆள்வதற்கும் ஆண்கள் உருவாக்கிய காட்டு மிராண்டித்தனமான சம்பிரதாயங்களும் தொடர்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து உருவாக்கிய சிலந்தி வலைக்குள் சிக்கிக் கிடக்கிறது பெண்ணின் மனம். அவளுடைய மனமே அவளை வசியம் செய்து வைத்திருக்கிறது. இந்த வளையத்திலிருந்து வெளிவர அவள் தனக்குத்தானே உதவ வேண்டும்.

பெரிய மரங்களைக்கூட வேரோடு பெயர்த்து எடுக்கும் சக்தியுள்ள யானையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். குட்டியாக இருக்கும்போது மிகவும் பலமுள்ள வடம் அல்லது சங்கிலியால் மரத்தில் கட்டி வைப்பார்கள். வடத்தை அறுத்துக் கொண்டோ, மரத்தை வேரோடு சாய்த்தோ கட்டிலிருந்து விடுபடும் சக்தி குட்டியானைக்கு இல்லை. காட்டில் சுதந்திரமாகத் திரிந்து பழகிய குட்டியானை, கட்டிலிருந்து விடுபட தன்னால் இயன்றவரை முயற்சி செய்யும். கட்டிலிருந்து விடுபடத் தேவையான அளவு பலம் தனக்கில்லை என்று அறியும்போது, அது தனது முயற்சிகளை எல்லாம் கைவிட்டு விடும். அவ்வாறு பழகிவிட்ட குட்டி யானை வளர்ந்து பெரியதாகும்போது, அதை சிறிய மரத்தில், அதிக வலுவில்லாத கயிற்றினால் கூடக் கட்டி வைப்பார்கள். அந்த யானை நினைத்தால் மிக எளிதில் மரத்தை வேரோடு சாய்த்து விட்டோ, கயிற்றை அறுத்துக்கொண்டோ கட்டிலிருந்து விடுபட முடியும். ஆனால் குட்டியாக இருந்தபோது அதற்கு ஏற்பட்ட பழைய அனுபவமானது, அதன் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மனதில் ஏற்பட்டுவிட்ட முன்பதிவால், அது விடுதலை பெற முயற்சி செய்வதில்லை. பெண்களின் விஷயத்தில் இதுதான் நடந்து வருகிறது. அவளது ஆத்ம சக்தி விழிப்படைவதை அனுமதிக்க நாம் மறுக்கிறோம். அந்த மகாசக்தியை அணை கட்டித் தடுத்து நிறுத்துகிறது இன்றைய சமூகம்.

எச்செயலையும் செய்வதற்கான எல்லையற்ற சக்தி ஆண்-பெண் ஆகிய இருவரிடமும் சமமான அளவில் உள்ளது. சமூகம் பெண்ணின் மீது திணித்துள்ள நியதிகள், நிபந்தனைகள் என்னும் சங்கிலியை உடைத்துக்கொண்டு வெளியில் வரப் பெண்ணால் முடியும். கடந்தகாலம் பெண்ணின் மனதில் உருவாக்கிய குறைகள் நிறைந்த பதிவுகள் எல்லாம் பெண்ணின் முன்னேற்றத்துக்குத் தடையாக நிற்கின்றன. பெண்ணின் மனதில் பயத்தையும், சந்தேகத்தையும் வளர்க்கும் நிழல்கள் அவை. நிழல் உண்மையானதல்ல. பொய்யாகும்.
ஆண்கள் பொதுவாக உடலின் வலிமையில் நம்பிக்கை உள்ளவர்கள். வெளிப்பார்வையில் பெண்ணைத் தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும் காணவும், ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள். ஆனால், மனதளவில் அவளை முறையாகப் புரிந்துகொள்ளவோ, புரிந்துகொண்டு அங்கீகரிக்கவோ அவர்களுக்கு இன்றும்கூட கஷ்டமாக இருக்கிறது என்ற உண்மையை மறைத்து வைப்பதில் பயனேதுமில்லை.

இங்கே ஒரு கதை நினைவுக்கு வருகிறது.. ஒரு பெண்மணி, பலனை எதிர்பாராது பிறருக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவையெனக் கருதி, அதில் மனமகிழ்ச்சி அடைந்து வந்தார். அந்நாட்டின் மதத்தலைவர்கள் அவரை ஒரு அர்ச்சகராக (புரோகிதையாக) நியமித்தார்கள். அந்நாட்டில் ஒரு பெண்ணை அர்ச்சகராக நியமிப்பது இதுவே முதல் முறையாகும். அவரைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்ததை மற்ற அர்ச்சகர்கள் சிறிதும் விரும்பவில்லை. அதுமட்டுமல்ல. அவர்களுக்கு அளவற்ற கோபமும் வந்தது. ஆனால், பணிவும், நிஷ்டையும், ஆன்மீகிக அறிவும் நிறைந்த அந்தப் பெண் அர்ச்சகர் மிக விரைவில் பிரசித்தி அடைந்தார். எல்லோரும் அவரைப் புகழ ஆரம்பித்தனர்.
இதனால் அர்ச்சகர்களின் பொறாமை ஆதரித்தது. ஒருமுறை, அருகிலிருந்த தீவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள அர்ச்சககள் அனைவரும் புறப்பட்டனர். வேண்டுமென்றே அவர்கள் பெண் அர்ச்சகரை அழைக்கவில்லை. ஆனால், படகில் ஏறியபோது அந்தப் பெண்மணி படகில் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர். ''இங்கேயும் இது வந்துவிட்டதா?'' என்று அவர்கள் முணுமுணுத்தனர். தீவை அடைவதற்கு இரண்டு மூன்று மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். சுமார் ஒருமணி நேரம் கழிந்தபோது படகு நின்றது. படகின் சொந்தக்காரன் பரிதவிப்புடன், ''நாம் நன்றாக மாட்டிக்கொண்டோம். டீசல் தீர்ந்துவிட்டது. போதுமான அளவு டீசல் எடுத்துவர நான் மறந்து விட்டேன். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வேறு படகு எதுவும் வருவதாகவும் தெரியவில்லை'' என்றான். செய்வதறியாமல அனைவரும் திகைத்தனர். அப்போது அந்தப் பெண் அர்ச்சகர் முன்வந்து, ''சகோதரர்களே, கவலை வேண்டாம். நான் சென்று டீசலுடன் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுப் படகிலிருந்து இறங்கி, கரையை நோக்கி நீரின்மீது நடக்க ஆரம்பித்தார். இந்தக் காட்சியைக் கண்ட அர்ச்சகர்கள் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர். சட்டென சுதாரித்துக்கொண்ட அவர்கள் பரிகாசம் நிறைந்த குரலில், ''பார்த்தீர்களா, அவளுக்கு நீச்சல் கூடத் தெரியவில்லை'' என்றனர்.
இதுவே பெரும்பாலான ஆண்களின் மனோபாவம். பெண்ணின் சாதனைகளை அலட்சியமாகக் காண்பதும், அவற்றைக் குறைகூறுவதும் ஆணின் இயல்பாகும்.


ஆணின் கையில் சிக்கியுள்ள வெறும் அலங்காரப் பொருளல்ல பெண். ஆண், ஒரு பூந்தொட்டியில் வளர்க்கும் செடியைப் போல் பெண்ணை ஆக்கி வைத்திருக்கிறான். ஆணுக்கு உணவு தயாரிப்பதற்கு மட்டும் பிறந்தவளல்ல பெண். பெண்ணை முன்னேற அனுமதிக்காமல், அவளைத் தனது விருப்பத்துக்கு ஏற்ப இயக்ககூடிய டேப்ரெக்கார்டரைப் போல் ஆக்கவே ஆண் முயற்சி செய்கிறான்.

உண்மையில் எல்லா ஆண்களும் பெண்ணின் ஒரு பாகமே. எல்லாக் குழந்தைகளும் தாயாரின் உடலின் ஒரு பாகமாகவே கர்ப்பப்பையில் வளர்கின்றன. ஒரு குழந்தைக்குப் பிறப்பளிப்பதைப் பொருத்தவரை, அவனுக்கு ஒரு நிமிட வேலை. அவ்வளவுதான். அத்துடன் ஆணின் பங்கு முடிந்துவிடுகிறது. ஆனால், பெண் அதனை ஏற்று, அதனைத் தனது உடலின் அம்சமாக மாற்றி, ஜீவனாக உருவாக்குகிறாள். அது வளர்வதற்குத் தேவையான சூழ்நிலையை தனக்குள் அவள் ஏற்படுத்திக் கொடுக்கிறாள். அதன்பிறகு, அதற்குப் பிறப்பளித்து, கவனத்துடன் வளர்க்கவும் செய்கிறாள். பெண் தாயாவாள்.

உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பெண்களாகும். ஆகவே, பெண்ணுக்கு உரிய இடமும், சுதந்திரமும் அளிக்கவில்லை எனில், அது உலகிற்கே மிகப்பெரிய இழப்பாக இருக்கும். ஆண் செய்யக்கூடியவை அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும். சொல்லப்போனால், அதைவிடக் கூடுதலாகவே அவளால் செய்ய முடியும். புத்தி சக்தியிலும், திறமைகளிலும் பெண் ஆணைவிடத் தாழந்தவள் அல்ல.

ஆரம்பம் நன்றாக இருந்தால் இடைப்பகுதியும் முடிவும் சரியாக இருக்கும். தவறான அடிப்படையில் ஆரம்பிக்கும் காரணத்தால்தான் பெண் பல நலன்களை இழக்க நேரிடுகிறது. உதாரணமாக, ஆணுக்கு சமமாக சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் பெண்ணுக்கும் இடமளிக்க வேண்டும் என்பது நியாயமான ஒரு உரிமையாகும். அதற்காக முயற்சி செய்வதும் சரியே. அதற்கு ஆரம்பம் சரியாக இருக்க வேண்டும். ஆனால், இன்று இந்த ஆரம்பம் தவறாகிவிட்டது. அதைக் குறித்து உருவான கருத்தும் தவறாகிவிட்டது. ஆரம்பத்தை விட்டுவிட்டு, முடிவை நோக்கி அவள் ஒரேடியாகத் தாவ முனைகிறாள்.
வாழ்வின் அஸ்திவாரம் எது? பெண்ணைப் பெண்ணாக்குவது எது? அவளுடைய அடிப்படைக் குணங்களான தாய்மை, அன்பு, கருணை, பொறுமை போன்றவையாகும். பெண்ணின் அடிப்படை தத்துவம் தாய்மையாகும்.

தாய் ஆவதும், மனைவி ஆவதும், கணவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் நண்பனாவதும் அவளுக்கு எளிதான செயலாகும். இல்லற வாழ்வையும், உத்யோக வாழ்வையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பிக் கொள்ளாமல் இருக்க அவளால் முடியும். அலுவலகத்தையும், பதவியையும் வீட்டிற்குக் கொண்டு வருவதும், அதன் விளைவான உணர்ச்சிகளை மனைவியிடமும், குழந்தைகளிடமும் வெளிப்படுத்துவதும் பெரும்பாலான ஆண்களின் இயல்பாகும்.

சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் திறமையைப் பெண்ணுக்கு அளிப்பது அவளுடைய தாய்மையின் சக்தியாகும். அந்தப் பண்பில் அவள் எந்த அளவுக்கு மனம் ஒன்றுபடுகிறாளோ, அந்த அளவிற்கு அவளுக்குள்ளே ஆற்றல் பெருகும். அவளது குரலை உலகம் உற்றுக் கேட்க ஆரம்பிக்கிறது.

இன்றைய உலகில் போலித்தன்மை ஒரு தொத்துவியாதி போல் பரவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பெண்மையும், தாய்மையும் கலப்படத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஆணின் முழு மனதுடன் கூடிய ஒத்துழைப்பு அவளுக்குத் தேவை.
ஆணும், பெண்ணும் பரஸ்பரம் உதவினால் இன்று உலகில் காணும் அமைதியின்மையும், சமாதான மின்மையும், போராட்டமும், யுத்தமும் பெருமளவில் குறையும். இவ்வாறு உதவும் மனநிலை இன்று தாறுமாறாகிக் கிடக்கிறது. இதை நாம் மீண்டும் பெற வேண்டும். அப்போதுதான் பிரபஞ்சத்தின் சமநிலையைச் சீராக்க முடியும்.

மனிதப் பண்பாடு உருவாகி, ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து விட்டன. ஆயினும், நாம் இன்றும் பெண்ணுக்கு இரண்டாம் இடத்தையே அளிக்கிறோம். ஆண் உருவாக்கிய கட்டுப்பாடுகள் எனும் வேலிக்குள்ளே பெண்களின் திறமை மொட்டுகள் விரியாமல் வாடிப்போகின்றன.
சமூகத்தின் சட்ட திட்டங்களும், மத ஆசாரங்களும் அவை தோன்றிய காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவே உருவாயின. பெண்ணின் வளர்ச்சிக்காக அன்று உருவாக்கப்பட்ட அந்த சட்ட திட்டங்கள் இன்று காலாவதி ஆகிவிட்டன. அதுமட்டுமல்லாமல், அவை பெண்ணின் இன்றைய வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கின்றன.

ஆண், அவனுக்காகப் படைத்த ஒரு உலகத்தில்தான் இன்று பெண் வாழ்ந்து வருகிறாள். அந்த உலகத்திலிருந்து வெளியில் வந்து, அவள் தனக்குரிய தனித்தன்மையை நிறுவ வேண்டும். அதேசமயம், பெண் விடுதலை என்பது, அவள் மனம்போன போக்கில் வாழ்வதற்கும், நடந்துகொள்வதற்கும் உரிய சுதந்திரமல்ல. பெண்ணின் உயர்வு அவளது மனதிற்குள்ளிருந்தே ஆரம்பமாக வேண்டும்.

ஆண்களைப் போல் நடந்துகொள்ள முனைவதால் இது கிடைக்காது. பெண்ணிடம் சக்தி விழிப்புற வேண்டுமெனில், முதலில் தனது பலவீனங்களை அவள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
மாறாக, தனது சுதந்திரத்திற்காகப் போராடும் பெண், தன்னிடமுள்ள பெண்மையையே இழக்கின்ற குறைபாட்டை இன்று பல இடங்களில் காண்கிறோம். இது உண்மையான பெண் விடுதலை ஆகாது; அது, பெண்ணினத்திற்கும், சமூகத்திற்கும் தோல்வியாகவே மாறும். பெண்ணும் ஆணைப்போல் ஆகிவிட்டால், உலகிலுள்ள பிரச்னைகள் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

ஒருவிதத்தில், பெண்ணின் உலகை மிகக் குறுகியதாக்கியவள் பெண்ணே ஆவாள். உடல் அலங்காரத்திற்கும், புற அழகிற்கும் அளவற்ற முக்கியத்துவம் அளிக்கும் போது, ஆண் உருவாக்கிய கூட்டிற்குள் அவள் தானே சிக்கிக் கொள்கிறாள். சமூகத்திலிருந்து எதைப் பெறலாம் என்று சிந்திக்காமல், சமூகத்திற்கு எதைக் கொடுக்க முடியும் என்று பெண் சிந்திக்க வேண்டும். இந்த மனோபாவம் ஏற்பட்டால் அவளால் நிச்சயமாக முன்னேற முடியும்.
தாய்மை என்பது குழந்தைகளை ஈன்ற பெண்களிடம் மட்டும் காணப்படும் பண்பல்ல. எல்லாப் பெண்களிடமும், எல்லா ஆண்களிடமும் இயல்பாகக் காணப்படும் உள்ளார்ந்த பண்பாகும். அது மனதின் ஒரு பேருணர்வாகும் - அது அன்பாகும். அன்பு நம்முடைய சுவாசத்திற்கு நிகரானது. ''நான் என் உற்றார், உறவினர் முன்னால் மட்டுமே சுவாசிப்பேன். வேறு யார் முன்னாலும் சுவாசிக்க மாட்டேன்'' என்று யாரும் சொல்வதில்லையே? அன்பு அல்லது தாய்மை என்பது அதுபோன்றதுதான். அதற்கு எல்லைகள் இல்லை. பேத உணர்வில்லை.
இனி வருங்காலம் பெண்களின் பொற்காலமாக ஆக வேண்டும். பெண்மையின் நற்பண்புகளுக்கும், தாய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சாந்தியும், சமாதானமும் நிறைந்த ஒரு உலகை உருவாக்கும் முயற்சி வெற்றியடையும். இது நம்மால் இயலாத காரியமல்ல.

கலாநிதி சந்திரலேகா வாமதேவா
நன்றி - உயிர்ப்பு