Mittwoch, August 27, 2003

பெண், குடும்பம், குழந்தைகள்

பெண்,குடும்பம், குழந்தைகள். பிரச்சினைகள் குறித்த
சில அவதானங்கள்


காலத்தோடொத்து இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே மாறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எமது சூழலும் மாறுகிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப யாவுமே தம்மை இசைவாக்கிக் கொள்கின்றன. மரம், செடி, கொடியிலிருந்து நுளம்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இருக்கும் போது பெண்கள் எப்படி விதிவிலக்கா இருக்க முடியும்?

பெண்களைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகளாக வீடு, குடும்பம் சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சமுதாய மாற்றங்களுடன் கால ஓட்டத்தில் அதற்கப்பாலும் பெண்ணின் உழைப்பு தேவைப்பட்டது. புராதன கம்யூனிஸ் சமுதாயத்திலிருந்து நிலப்பிரபுதுவ அமைப்பு மாறிய போதும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களது வாழ்கை முறையிலும் அது மாற்றங்களை ஏற்படுத்தியது.

பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபட்ட போதும் குடும்பம் சார்ந்த உழைப்பையும் அவளே செய்ய வேண்டிய நிலை இருந்தது. வேலைகள் சமனாக பங்கிடப்படாமல் இரட்டைச் சுமையுள் அவள் அழுந்தினாள். அவளது சமூக உற்பத்திக்கான உழைப்பு இரண்டாம் தரமானதாகவே கருதப்பட்டது. மீண்டும் குடும்பத்திற்கான அவளது உழைப்பே வலியுறுத்தப்பட்டது. விரும்பவும் பட்டது. இவ்விரட்டிப்பு வேலைப் பளுவிலிருந்து பெண் விடுபட முனையும் போது அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது குடும்பத்திற்கு வெளியே உலகைக் காணவிளையும் போது மீண்டும் மீண்டும் அடக்குமுறைக்குள் பெண்ணைத் தள்ளுவதற்கான எதிர்ப்புக் குரல்கள் உயர்வாக ஒலிப்பது இயல்பானதுதான். ஏனெனில், மாற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வசதிகளை அனுபவிக்க விரும்பும் அனைவருமே பெண் விடுதலை பெறுவதை விரும்பமாட்டார்கள்.

பெரும்பாலான மக்கள் மத்தியில் பெண் வேலைக்குப் போவதால்தான் குடும்ப உறவு சீரழிகிறது. பிள்ளைகள் சீரழிந்து போகின்றனர். போதைவஸ்து பாவிக்கின்றனர். தீய பழக்க வழக்கங்களால் அழிந்து போகின்றனர். அவர்களுக்கு அன்பு கிடைப்பதில்லை. குடும்ப உறவு அழிகிறது. சமுதாயம் நலிந்து போகிறது என்ற கருத்துக்கள் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் உண்மையைத் தரிசிக்க மறுக்கின்றனர். அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம்முன் உள்ளன. ஆனால், இவர்கள் பெண்களுக்கு முன் வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. பரிசீலிக்கப்பட வேண்டியவை.

பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது கடமைகளாக செய்து வந்த பெண், சம அந்தஸ்துடன் குடும்பத்திற்கு அப்பால் உள்ள உலகத்திலுள்ளும் தனது பங்களிப்பை செய்யவிழையும் போது குடும்பம் பல பிரச்சினைகள் எதிர்நோக்கும். கால காலமாக பெண்களது கைகளில் இருந்த சமையறை, குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்படும் போது அவ்வேலைகளில் குறைபாடும், நேர்த்தியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது பிரச்சினைகளும் மறைந்து போகும்.

இப்பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை. தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினையாக கருத முடியாது. குடும்ப அமைப்புகளை பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணி பெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவனிப்பதுதான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.

உதாரணமக தற்காலக் குழந்தைகள் பால் குடித்து வளர்வதில்லை. தாய்மார் வேலைக்குப் போவதால் பால் கொடுப்பதில்லை. இதனால் பிள்ளைகள் நலிந்து போகின்றன. எனவே, பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து பிள்ளை வளர்க்க வேண்டும் என்று 'புத்திஜீவி" ஒருவர் பிரச்சினையையும் அதற்கான தீர்வையும் கூறியிருக்கின்றார்.

இதில் கூறப்பட்ட பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்காக அவர் கூறும் தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையென்றால் அது ஒரு தனிப் பெண்ணின் பிரச்சினை அல்ல. சமுதாயத்தின் பிரச்சினை. இதற்கான தீர்வை பரந்த மனத்துடன் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். பால் ஒரு பிள்ளைக்கு எவ்வளவு காலம் கொடுப்பது சிறந்தது என்பது அறியப்பட்டு அந்நாட்களை தாய்மாருக்கு விடுமுறையாக வழங்க வேண்டும்.


நோர்வே, கனடா, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் பாலுட்டும் தாய்மார்களுக்கு, பாலுட்டும் நேரங்கள் என குறுகிய நேர விடுமுறைகள் அமுலில் உள்ளன. இப்பிரச்சினைக்கு மாற்றுத் திட்டங்களைப் பற்றி நாமும் யோசிப்பது அவசியம். பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அதை விடுத்து கேலியாகவும் கிண்டலாகவும் குடும்பத்தைச் சீரழிக்கும் பாவிகளாகவும் பெண் சித்திரிக்கப்படுவது ஆணாதிக்கச் சிந்தனை முறையின் மேலாட்சியைக் காட்டுகிறது.

இன்றைய காலம் குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப அலகே பெண்களின் அடிமைத்தனத்துக்கும் அடக்குமுறைக்கும் காரணம் என்று தீவிரப் பெண்ணியவாதிகள் கருதுகின்றனர்.

சமுதாய உற்பத்தி முறைமை அதன் உறவுகள், கலாசார விழுமியங்கள். என்பவற்றிற்கேற்ப குடும்ப அமைப்பு காலத்துக்கு காலம் மாறி வந்துள்ளது. எமது இன்றைய சமூக முறைமை ஜம்பது அறுபதுகளில் இருந்ததைவிடவும் எவ்வளவோ மாறிவிட்டது. பெண்கள் சமுதாய வேலைகளில் பங்களிப்பதால் குடும்பம் சிதைவுறுவதாக கூறுவதானது மிகவும் தவறான கருத்தியல்பு ஆகும். குடும்பம் பற்றிய கோட்பாடுகள் முன்னைய சமூக வாழ்வு முறைக்கேற்ப இயல்பாக்கம் அடைந்தாக இருப்பதால் இன்றை வாழ்வு முறைக்கேற்ப அவை தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தகவமைத்துக் கொள்ளும் வரையான காலத்தில் குடும்பம் சீரழிந்ததாகப்படுகிறது. இவை சிதைவுகளல்ல. மாறாக அமைப்பு புதிய நிலைக்கு ஏற்ப மாற்றுருப் பெரும் போக்கில் ஏற்படும் உடைவுகள் அல்ல, வளர்ச்சிகள் என்றே கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியைக்கூட ஒரு பயன் விளைவுள்ள வளர்ச்சியாக மாற்றுவதில் எமது பங்களிப்பை வழங்க முடியும்.

இன்றைய குடும்ப அமைப்பின் போக்கை விமர்சித்து, மாறாக வேறு வழிகளில் உருவாகி வருகின்றன. குடும்பம் இன்றைய ஜனநாயக சமூக அமைப்பினுள் உள்ள ஒரு வடிவம் என்பதால் குடும்பத்தில் கணவன், மனைவி குழந்தைகளுக்கிடையிலான உறவினையும் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று மாக்ஸியப் பெண்ணிலைவாதிகள் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். 'புதிய ஜனநாயகத்தை" சீனாவில் அறிமுகப்படுத்துகையில் குடும்ப வேலைப் பிரிவினை மற்றும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவில் சமத்துவம் என்பவற்றைப் பேணுவது பற்றிக் குறிப்பி;ட்டார். 'ஜனநாயக ப10ர்வமான" அடிப்படையில் குடும்பம் அமைதி காணமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்

இன்னொரு சாரார் குடும்பம் என்னும் வழமையான முறைகளை மீறி, ஆணும் பெண்ணும் தம்மால் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்பும்போது எத்தகையா சம்பிரதாய பூர்வமான திருமண முறைகளுமற்ற புரிந்துணர்வு, சமத்துவம் என்ற அடிப்படையில் 'சேர்ந்து வாழல்" (Living to gether) என்ற முறைமையினை மாற்றதாக் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும் சமூகத்தில் பெண்களின் சம உரிமை, சம அந்தஸ்து என்ற விடயங்கள் அக்கறை இன்றி பெண்ணிலைவாதம் பற்றித் திறந்த மனதுடன் ஆராய யார் மறுத்தாலும் குடும்பம் பற்றிய கேள்விகள் எழுதப்பட்டுத்தான் வருகின்றன. காலச் சக்கரம் தனது பாதையில் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதைத் தடுப்பது என்பது சூரியனை கைகளால் பொத்த நினைப்பது போலத்தான்!. எனவே இவ்வாறான மாற்று அமைப்புகள் அல்லது மாற்று வழிமுறைகள் பற்றிய கணிப்பீட்டை நிதானமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, சமுதாயம் தொடர்பான புதிய சிந்தனைகளுக்கு வழிகோலும், வாழ்வுக்கும் அர்த்தம் சேர்ப்பதாக அமையும்.


நன்றி தினக்குரல்.

மனைவியிடம் ஆண்கள் மூர்க்கத்தனமாக..

மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர்.
எந்தப் பெண்ணையும் சீராகச் சிந்திக்க விடுவதில், நம் ஆண்களுக்கென்னவோ, அவ்வளவாக பிடித்தமே இல்லை. பெண்ணை அடக்கி ஆளவே பழகிய விதம், ஆண்களை ஆட்டிப் படைக்கிறது. பெண்கள் படும் அவதியும், வேதனையும் அவர்களை விவகாரத்து தீக்குளிப்பு, தற்கொலை, கருக்கலைப்பு, வேறு மனைநாடுதல் என்ற அசாதராண செயல்கள் குறித்து யோசிக்கத் தூண்டுகிறது. செயற்பட வைக்கிறது. கொடுமைகளையும், ஆணாதிக்கத்தையும் அனுபவிக்கும் பெண்களில் இனப்பாகுபாடு, பணப்பாகுபாடு கிடையவே கிடையாது. இந்த வேதனை, அடக்குமுறையைப் பொறுத்தவரையில், இது பெண்களுக்கே உரிய பொதுவான சொத்து.

டில்லியில் தொழிலதிபாராக இருக்கும் தன்னுடைய கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுக்கிறார். மும்பையில் முன்னணி நட்சத்திர நடிகை ஒருவர், தான் கர்ப்பிணியாக இருக்கும்போது கணவர் எட்டி உதைத்தார் என்று கூறி விவகாரத்து கோருகிறார். கொல்கத்தாவில் தன்னுடன் சேர்ந்து தண்ணி அடிக்கவில்லை என்று கணவர் அடிப்பதாக மனைவி விவகாரத்து கோருகிறார். சென்னையில் குழந்தை இல்லையென்ற ஒரு காரணத்திற்காக அதிகார வர்க்கத்தில் இருக்கும் கணவனிடம் நீண்ட நாட்கள் மனதளவிலும், உடலளவிலும் வேதனைப்பட்ட மனைவி விவகாரத்து கோருகிறார்.

இப்படி நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் ஜாதி, மத பேதம் இல்லாமல் பண்பாட்டையும், அன்பையும் கடந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாழ்கையில் இவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.

சர்வதேச தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் நெட்வேர்க் உடன் இணைந்து சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் (ஜ.சி.ஆர்,டபிள்ய10) 2000 ஆவது ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. இதற்கு நாட்டின் ஏழு நகரங்களில் பத்தாயிரம் பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. நாட்டில் 45 சதவீதப் பெண்கள் கணவன்மார்களால் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, அறையப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறன்றனர். 75 சதவீதப் பெண்கள் கணவர்மார்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்பது தெரிய வந்தது. கடந்த 2002 இல் நாட்டின் நான்கு நகரங்களில் ஜ.சி.ஆர். டபிள்ய10 ஆய்வு மேற்கொண்டது.

இதில் ஆண்கள் இயற்கையாகவே மூர்க்கத்தனமாக இருப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது.ஒருவர் ஆணாக இருந்தால் மூர்க்கத்தனமாக மாற வேண்டும் என்பது இல்லை. ஆண்மை என்பது ஒரு ஆண் எந்தளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறாரோ, அதனடிப்படையில்தான் மனைவிகளிடம் நடந்து கொள்வார்கள் என்கிறார் ஜ.சி.ஆர்.டபிள்ய10 உறுப்பினர் ஒருவர்.
ஆண்களை எப்போதுமே - சுபீரியர் செக்ஸ் - என்று போதித்து வந்துவிட்டோம் இதுதான் மனைவிகளைக் கட்டுப்படுத்த அவர்களைத் தூண்டுகிறது.

எப்போது மனைவியை கணவன் அடிக்கலாம்? என்ற வழிகாட்டுதல்களுடன் சிறு குறிப்புப் புத்தகங்கள் டில்லி போன்ற நகரங்களில் கிடைக்கின்றன. இப்புத்தகத்தின் விற்பனை எந்தளவிற்கு இப்புத்தகம் படிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
மனைவி ஒழுக்கம் இல்லாதவராக இருந்தால் அடிக்கலாம் என்று இப்புத்தகம் வழிகாட்டுகிறது. என்கிறார் அனைத்துப் பெண்கள் அமைப்பின் இயங்குநர் ஜோத்சனா சாட்டர்ஜி.

கணவனுக்கு மனைவி மரியாதை கொடுக்காமல் இருப்பதுதான் அந்த ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது| என்பது ஜ.ஆர்.சி.டபிள்ய10. ஆய்வில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப், டில்லி போன்ற நகரங்களில் ஆண்களிடம் எடுக்ப்பட்ட மதிப்பீட்டில், தங்களது பேச்சை மனைவி கேட்காவிட்டால் ஆண்மைத்தன்மைக்கே இது அச்சுறுத்தலாக இருப்பதாக 77 சதவீத கணவர்கள் கூறியுள்ளனர். தங்களது ஆண்மையைக் காப்பாற்றிக் கொள்ள மனைவியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கின்றனர்.அதிகார கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கும் ஆணின் தேவைகளில், ஏதாவது ஒன்று ப10ர்த்தியாகாமல் போனால், அது அந்த ஆணை மூர்க்கத்தனமாக்குகிறது. பெண்களை தங்களுக்கு இணையானவர்களாகக் கருதுவதில்லை. எந்த சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் மூர்க்கத்தனமாக மாறுகிறார் என்பதை நாம் கண்டறிய வேண்டும். என்கிறார் டில்லி கல்லூரி பேராசிரியை ஒருவர்.

ஆண்மைக்குரியவர் என்பதுடன் வயது, ஜாதி, சழூக அந்தஸ்து, முக்கியமாக கல்வி ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன.பாலியல் ரீதியாகவும் கணவனால் மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறார். மனைவியிடம் இருந்து எஜமான விசுவாசத்தைப் பெற மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக 79 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பது, கணவருக்கு கீழ்படிய மறுப்பது, உரிமையை விட்டுக் கொடுக்காதது மற்றும் பாலியல் தேவையை திருப்தி செய்து கொள்ள முயற்சிப்பது போனறவையும் ஒரு ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது.மூர்க்கத்தனம், சமூக, பொருளாதார அந்தஸ்து மற்றும் கல்வி ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.

பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தும் ஆண்களில் படிக்காதவர்களை விட படித்தவர்களே முதலிடத்தில் உள்ளனர். பாலியல் கொடுமையில் ஒரு ஆண்டு கூட படிக்காத 32 சதவீத ஆண்களும், ஒன்று முதல் ஜந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். இது ஆறு முதல் பத்தாண்டுகள் படித்தவர்களில் 57 சதவீதமாக இருக்கிறது. இதே சதவீதம் மேல்நிலைப் படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களிடமும் காணப்படுகிறது.சமூக, பொருளாதார, அந்தஸ்து படைத்தவர்களிடத்தில் அதிக வருமானம் பெறும் ஆண்கள், மனைவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துகின்றனர். இவர்களிடம் 61 சதவீதம் காணப்படுகிறது. இது அந்தஸ்து குறைந்த ஆண் வர்க்கத்தில் 35 சதவீதமாக இருக்கிறது. உயர்ந்த படிப்பு, சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த பெரும்பாலான ஆண்கள் தான் மூர்க்கத்தனமாக மாறுகின்றனர். நன்கு படித்த, சமூக அந்தஸ்து உடைய ஆண்களிடம் மூர்க்கத்தனம் இருக்காது என்று வெளியுலகம் நம்பிக் கொண்டிருப்பது ஒரு மாயைதான்.

தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து வெளியே வரபெண்கள்தான் முன்வரவேண்டும். திருமண வாழ்;க்கையில் இதெல்லாம் சகஜம். தவிர்க்க முடியாதது. |கணவனே கண் கண்ட தெய்வம்| என்று பெரும்பாலான பெண்கள் நினைத்துக் கொள்வது பொறுத்துக் கொள்ளமுடியாது. இன்றும் 55 சதவீதப் பெண்கள் இந்த கொடுமைகள் எல்லாhம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் இது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதைத் தவிர்க்க பாடசாலைகளில் இருந்தே ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படவேண்டும். இருவருக்கும் சமுதாயத்தில் சம அந்தஸ்து உள்ளது என்பதைப் புரிய வைக்க வேண்டும். அப்பொழுதான், ஒரு பட்ச சார்பான மூர்க்கத்தனத்தை ஒழிக்க முடியும்.

நன்றி தினக்குரல்.
(27 -08 -2003)

சூரியன்.கொம் இலிருந்து