Dienstag, August 02, 2005

புதுயுகமும் பெண் விடுதலையும்

த.தயாளினி

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, உனக்கேன் தனி வாழ்வு, இணைந்தே செயற்படு, ஒன்றிணைந்தே குரல் கொடு, ஓங்கிடும் உன் பலம், கலங்கிடாதே உன் காலங்கள் யாவும் காவியத்தில் முடியும். பலம் கொண்ட மாந்தர்க்கு பூமியிலே பயன் உண்டு. ஓங்கியே வளர்வாய். நன்மைகள் உனக்குண்டு" பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதன் காரணமாக ஆற்றல்களை வெளிப்படுத்த முடியாது போகிறார்கள்.

தங்களது ஆசைகள், சிந்தனைகள் மறுக்கப்படுகின்றன. வாழ்க்கை பற்றிய தேடுதல்களுக்கும், சுயதொழில் பற்றிச் சிந்திப்பதற்கும் முடியாமல் உள்ளது. மேலும் ஆக்கபூர்வமான ஆளுமைகள் இருந்தும் அவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையில் பெண்கள் இருக்கின்றார்கள். இதனால் இப்பெண்கள் தங்களது ஆற்றல்கள், திறமைகள், உணர்வுகள், விருப்பங்கள் போற்றவற்றை வெளிப்படுத்த தயங்குகின்றனர். இவற்றை வெளிப்படுத்த வேண்டும். நாளாந்தம் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை சமூகத்திற்கு உணர வைக்க வேண்டும்.

இவ்வாறு பெண்கள் இருப்பதற்குக் காரணம் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளும், சமூகப் பார்வைகளுமே காரணமாகும். இது பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. மற்றும் பெண்களுக்குப் பல பழ மொழிகளைச் சொல்லி அடக்கி வைக்கும் நிலமைகளும் அன்று தொடக்கம் இன்றுவரை இருந்து வருகின்றது.

அதாவது பெண்கள் எந்த வேலை செய்ய முற்பட்டாலும் உடனே கூறுவார்கள் "பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா?", "பெண் புத்தி பின்புத்தி" இவ்வாறான பழமொழிகள் பெண்களை இரண்டாம் பட்சமாக சுட்டிக் காட்டுகின்றது. மேலும் சமுதாயம் பெண்ணினது முயற்சியை சிலந்தி வலைக்கு ஒப்பிடுட்டும், ஆமைக்கு ஒப்பிட்டும், மற்றும் பெண்ணின் குற்றத்தை பெரிதாகவும், ஆண்களின் குற்றத்தைச் சர்வ சாதாரணமாகவும் இன்றைய சமூகம் பார்க்கின்றது. இவ்வாறு உள்ள எமது சமூகத்திற்கு ஒரு புதிய மாற்றத்தை சமுதாயமே ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான பார்வைகள் சமூகத்தில் ஏன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. சமூகம் பெண்கள் மீது கொண்டுள்ள கருத்துத்தான் என்ன? இதிலிருந்து விடுபட ஏன் இன்னும் சமூகம் யோசிப்பதில்லை? சமுதாயம் பெண்கள் மீது கொண்ட பார்வை காலம் காலமாக இப்படித்தான் இருந்து வருகின்றது.

இதனை ஒரு வரையறையாக வைத்துள்ளார்கள். பெண்ணானவள் தலைகுனிந்து நடக்க வேண்டும். மேலும் தன் கணவனை இழந்த பெண் சுபகாரியங்களுக்கு முன்னுக்கு வரக் கூடாது போன்ற கருத்துக்களைக் கண்முன்னே காண முடிகின்றது. இவ்வாறு உள்ள எமது சமுதாயம் முழுமையான ஒரு திட்டமான சமுதாயமாக வருவதற்கு புரிந்துணர்வு வேண்டும்.

மேலும் வீடுகளிலும், வீதிகளிலும், வேலைத்தளங்களிலும், கிராமங்களிலும், நகரங்களிலும் சிறுவர்கள் துஷ்பிரயோகம், பெண்ணடிமைத்தனம், பாலியல் பலாத்காரம், பால் நிலைப்பாகுபாடு என இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் கூடிக் கொண்டு வருவதை நாம் பார்த்தும், கேட்டும், அனுபவித்தும் வருகிறோம். இது அனைவருக்கும் தெரிந்த விடயமே.

மேலும் எம் சமூகத்தில் ஒரு பெண் திருமணத்தின் முன் வேறு யாரையோ காதலித்திருந்தால் அப்பழைய காதல் குற்றமாகக் கருதப்பட்டு நாளாந்தம் அந்தப் பெண் கணவனால் துன்புறுத்தப்பட்டு வருவதை ஒரு சில குடும்பங்களில் காணக் கூடியதாக உள்ளது. அத்தோடு எமது சமூகத்தவரும் இத்தகைய ஒரு நிலையை இழிவாகவே நோக்கும் ஒரு போக்கும் காணப்படுகின்றது.

தவிர பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அடக்கம், ஒடுக்கமாய் வளர்த்து எந்தவித கஷ்டமும் இல்லாத ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கக் கூடிய ஒரு நிலையை உருவாக்குகின்றோம் என நினைத்து அவர்களை ஒரு வரையறைக்குள்ளே வைத்திருப்பர்.

இந்த நிலையில் பெண்கள் தங்கள் உண்மையான படைப்புக்களை வெளிக்கொணரும் போது குடும்பத்தாரை மீற வேண்டும். பின்பு சமூகத்தவரை மீற வேண்டும். இவ்வாறான தடைகளைத் தாண்டுவதற்கு பெரும்பாலான பெண்களால் முடியாத காரியமாகி விடுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. சமூகத்திலிருந்து விலகி வாழ்தல் முடியாத காரியம். இவ்வாறான போக்குகளினாலும் பெண்களினது ஆற்றல்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாத மோசமான நிலை ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாய் இருக்கின்றது.

அது மாத்திரமின்றி நாம் ஏதோ ஒரு சோகப் பாட்டைப் பாடினாலோ, அல்லது வானொலியினூடாகக் கேட்டு ரசித்தாலோ சமுதாயம் உடனே வாழ்க்கையில் என்ன காதல் தோல்வியோ? அல்லது எவனாவது ஏமாற்றி விட்டானா என்ற ஒரு ஏளனக் கேள்விகளை கேட்பதை நாம் கண்டும், உணர்ந்துமுள்ளோம்.

இவ்வாறாகக் கேட்பவர்கள் மத்தியில் உண்மையிலே பெண்கள் தங்களது உணர்வுகளையோ அல்லது, விருப்பங்களையோ வெளிப்படுத்த சமூகத்தின் மத்தியில் பயப்படுகின்றார்கள். சமூகத்தின் மத்தியில் நல்ல திறமைகளை வெளிப்படுத்துகின்ற பெண்கள் ஒடுங்கிய நிலையில் இன்றும் எமது சமூகத்தில் உள்ளனர். இப்படியான காரணங்களால் பெண்களது ஆக்கங்கள் தணிக்கைகளுடன்தான் வெளிவருகின்றது.

ஆகவே இவ்வாறான நிலமைகள், போக்குகள், இன்றைய சமூகத்திலிருந்து விடுபட வேண்டும். அப்போதுதான் எமது பெண்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகள் வெளியில் வரும். பண்பாட்டின் கூடுதலான அம்சங்கள் உயர் சாதியினராலும், ஆண் தலைமைத்துவக் கருத்தியலினாலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்வாறான கீழ்மையிலிருந்து மீளவும், கௌரவத்தை நிலை நாட்டவும், தொடர்ச்சியாக போராடவேண்டியுள்ளது.

ஆகவே எல்ல விதமான நாடுகளிலும் பெண்கள் தமக்கெதிரான ஒடுக்கு முறைக்கு முகம் கொடுப்பவர்களாக இருந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் நேரத்திற்கு நேரம் பெண்ணின் வாழ்வியல் நடைமுறைகள் மாறிக்கொண்டிருக்கும் வேளையில் இதுவரை காலமும் கட்டிக்காக்கப்பட்டு வந்த கலாசாரம் சிதைக்காமல் உண்மையான அனுஷ்டானங்களை, விடுதலைப் போக்கினை அடைய வேண்டும். "பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வாக்கிற்கு இணங்க எமது பெண்களினூடாக மேலே கூறப்பட்ட நிலமைகளில் இருந்து சமூகம் மாறுதல்கள் ஏற்படுத்த வேண்டும். பெண்கள் தமது குரல்களை, தமது உரிமைகளை, தொடர்ச்சியாக உயர்த்த வேண்டும். சமூகத்தின் பெண்களின் துயர்தோய்த்த நிலையைக் கண்டு கோஷங்கள் எழுப்பப்பட்டு வர வேண்டும்.

இன்று சர்வதேச மட்டங்களில் பெண்கள் தொடர்பாக குரல் கொடுக்கும் அனைத்து தொடர்பு சாதனங்களும், விரும்பியோ, விரும்பாமலோ, சமூகம் செவி சாய்த்துக் கேட்கும் அளவிற்கு பெண்களின் அடக்குமுறை வன்முறை பற்றிய செய்திகளை ஓயாது வெளிப்படுத்திக் கொண்டிருப்பதானது அனைத்துப் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாட்டின் விளைவே என்பதை நாம் உணர வேண்டும்.

ஆகவே பெண்கள் தங்களது ஆற்றல்கள், திறமைகள், உணர்வுகள், விருப்பங்கள் போன்றவற்றை வெளிப்படுத்த வேண்டும். அதேவேளை பெண்களின் பிரச்சினைகளை சமூகத்திற்கு உணரவைக்க வேண்டும். இதற்குத் தடையாக உள்ள எமது பிரதேச சமூகப் பார்வைகளை எடுத்துக் காட்டி இவ்வாறான சமூகத்தின் மத்தியிலிருந்து பெண்கள் விடுபட முன்வர வேண்டும்.


Batticala Eelanatham
nantri-sooriyan.com