Sonntag, Mai 09, 2004

மாறவேண்டிய கருத்துருவாக்கங்கள்

ஆதிலட்சுமி சிவகுமார்

பெண்கள் எவ்வளவு தான் முன்னேற்றங் கண்ட பொழுதிலும் பெண்கள் பற்றிய சமூகபார்வை என்பது இன்னமும் சாபக்கேடானதாகவே இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் பெண்ணிற் பெருத்தக்க யாவுள' என்று வள்ளுவர் எழுப்பிய கேள்வி முதலாக இன்று வரை பெண்ணினம் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

பெண்களின் மாற்றங்களும், முன்னேற்றங்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவில் இருந்தாலும் பெரும்பாலும் துயரமும் ஆதங்கமும் நிறைந்ததாகவே இருக்கினறன. அண்மையில் நண்பர் ஒருவர். 'நீங்கள் (பெண்கள்) எல்லாம் நத்தைகள் ஓட்டுக்குள் தான் இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். இது அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும் கூட சமூகத்தில் காலம் காலமாய் பெண்கள் பற்றிய பார்வை இப்படித் தான் இருந்து வருகிறது என்பதற்கு இக்கூற்று சிறந்த எடுத்துக் காட்டாக அமைகின்றது.

பெண்களின் ஆற்றல்களை பலமாக அங்கீகரிக்க பலரும் விரும்புவதில்லை. உதாரணமாக, யாருக்கும் அடங்காமல் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்த கொம்பன் யானையை தன் வலிமையால் அடக்கிக்காட்டிய வீரப்பெண் அரியாத்தை. ஆனால் இந்தப்பெண் தெய்வஅருளாலேயே யானையைப் பணியவைத்ததாக கூறுவோரும் உள்ளனர். அதாவது பெண்னின் ஆற்றலை ஜீரணித்துக் கொள்ளமுடியாத நிலையில் வெளிப்படுத்தும் கருத்தே இதுவெனக் கொள்ளலாம். தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல உலகிலுள்ள பெரும்பாலான இனச் சூழலில் சமூகத்தில் இப்படியான கருத்துக்கள் இருப்பதை நாம் அறியலாம். பிரான்சின் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கரங்கள் நீண்டு விரிந்து தெரிந்த போது ஆர்க் எனும் கிராமத்திலிருந்து ஆவேசமாய் புறப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களை மோதிவென்று படைநடாத்திய வீரப்பெண் ஜோன் ஓப் ஆர்க் பின்னாளில் சூனியக்காரியென்று எள்ளி நகையாடப்பட்டு, உயிருடன் தீமூட்டிக் கொளுத்தப்பட்டாள் என்பது வரலாறு.

இன்றைக்கும் பல கிராமங்களில் பெண் பிள்ளைகள் பரீட்சைகளில் கூடிய பெறுபேறு பெற்றால், விளையாட்டுக்களில் பரிசுகள் பெற்றால் அதை பிள்ளையின் கெட்டித்தனம் என்று மெச்சுவதை விடுத்து 'கடவுளின் கிருபை' என்று மாற்றுவதை நாம் கண்கூடாய் பார்க்கின்றோம். காலம் காலமாக பெண்கள் பற்றி ஊன்றப்படுகின்ற கருத்து கருவூலங்களின் தோற்றப்பாடுகளே இவைகள் பெண்களின் உலகம் விரிவடைந்து வருகின்றது. பெண்கள் முன்னேறி வருகின்றார்கள். பெண்கள் சாதித்து வருகின்றார்கள். ஆனாலும் பெண்கள் மீதான சமூகப்பார்வை என்பது மாற்றம் காணாததாகவே இருக்கிறது.

இத்தகைய நிலைக்கு எந்த ஒரு தனிநபரையும் குற்றவாளியாக கூற முடியாது சமூகத்தில் பெண்கள் பற்றி ஆழப்பதிந்திருக்கும் அடிப்படைக் கருத்தில் மாற்றம் காணப்பட வேண்டும். பெண் என்பவள் யார்? இந்த உலக இயக்கத்தில் பெண்னின் பங்களிப்பு என்ன? அவள் தனது பங்களிப்பை முழுமையாக செய்யவிடாமல் தடுத்துநிற்கும் காரணிகள் என்ன என்பவை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது.

எமது தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல, 'ஆண்மைக்கும், பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது. அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது'. எனவே படைப்பியல் ரீதியாக பெண் வேற்றுமை காட்டப்படவேண்டியவள் அல்ல, மாறாக பெண் என்பவள் சமூகச் சுழற்சிக்கு உந்து சக்தியாகத் திகழவேண்டியவள்.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள் தம் நிலை உணர்வதில்லை. அகங்கள் குறுகியிருப்பதால் முன்னேற்றங்கள் தடைப்படுகின்றன. முன்னேற்றங்கள் தடைப்பட்டு குறுகிய வட்டத்துக்குள் வாழும் போது அவள் தன்னாலும் பிறராலும் சுமையாக உணரப்படுகிறாள். இந்த உணர்வு காலப் போக்கில் பெண்ணுக்குள் தாழ்வுச் சிக்கலை உண்டு பண்ணுகிறது.

காலம்காலமாய் பெண்பற்றி ஊன்றப்படும் பிற்போக்கான கருத்துகளும் பெண்ணுக்குள் உருவாகும் தாழ்வுச் சிக்கலும் சேர்ந்து அவளை அடிமைப்படுத்தி விடுகின்றன. அடிமையாகிப் போகும் மனநிலை காலப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே வாழ்வாகிப்போகிறது. உண்மையில் பெண் என்பவள் தனக்குள் இருக்கின்ற திறமையை ஆற்றலை உணர்ந்து கொள்ளக்கூடியவளாக வேண்டும். கல்வியில் நாட்டங் கொண்டு சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமைத்துவப் பண்புகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை அற்று ஒதுங்கிக்கொள்ளும் நிலையை மாற்றவேண்டும்.

நிர்வாகம் என்பது பெண்களுக்கும் ஏற்ற விடயம் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னம்பிக்கை அற்று ஒதுங்கிக்கொள்ளும் நிலையை மாற்றவேண்டும். 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்ற கேள்விக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் என்றாலும் பதிலளிக்க வேண்டும் உலக சனத்தொகையில் சரிபாதி பெண்கள் என்கிறார்கள். முன்னேற்றங் காட்டும் அல்லது ஆற்றல்களை வெளிப்படுத்தும் பெண்களின் தொகை மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது. உலகம் அறிவியலில் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்ட பொதிலும் பிற்போக்கான எண்ணங்களையும், சிந்தனைகளையும் பற்றிப்பிடித்து தொங்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்றைக்கும் சீதனப் பிரச்சினையால் திருமணமாகாத பெண்களின் பட்டியல் இருக்கின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றும் முகவர்களை நம்பி நடுத்தெருவில் நிற்கும் பெண்களின் கதைகள் வெளிவருகின்றன. காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் இருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது பெண்களின் உலகம் அறியாமையிலிருந்து இன்னமும் முற்றாக விடுபடவில்லை என்றே கூறமுடிகிறது. குடும்பம் பல பெண்களுக்கு சுமையாக அழுத்துகிறது. 'யாராவது என் பாரத்திற் பாதியைச் சுமக்க முன்வரமாட்டார்களா?' என்று ஏங்கும் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக சுரண்டப்படும் பெண்கள் இருக்கின்றார்கள்.

பெண்கள் தம்மனவுலக இருளில் இருந்து வெளிவரவேண்டும். ஒளிமையான எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். 'நன்மையும் தீமையும் பிறர்தர வாரா' என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். எமது வாழ்வும் வலுவும் எமது கரங்களிலேயே தங்கியிருக்கின்றது. ஆரோக்கியமான சமூகத்தை - தேசத்தைக் கட்டி எழுப்பவேண்டுமென்றால் பெண்கள் அகவிடுதலை அடையவேண்டும். பெண்கள் பற்றி சமூகத்தில் நிலவுகின்ற பிற்போக்குத்தனமான கருத்துக்கள் களைந்தெறியப்பட வேண்டும். பெண்களின் ஆற்றல்களும், ஆளுமைகளும் வெளிக் கொண்டு வரப்படவேண்டும் தம்மீது ஆழப்புரையோடி நிற்கும் சமூக கொடுமையும் அநீதியுமான ஒடுக்குமுறையைப் பெண்கள் உடைத்தெறிய வேண்டும்.

nantri - Eelanatham & Sooriyan.com