Montag, Juli 18, 2005

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா?

பெற்றோரே சிந்தியுங்கள்!
இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?


புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த 21ம் நூற்றாண்டில், இத்தனை தூரம் நாம் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்றதான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான முறையில் கிடைக்க வில்லை.

பல பெரியவர்களுடன் சாமத்தியச்சடங்கு பற்றிப் பேசிப் பார்த்த போது ஒவ்வொருவரும் சொன்ன அதற்கான காரணங்கள், ஒவ்வொரு விதமாகவே இருந்தன.

1 - ஆண் பெண் பாகுபாடின்றி விளையாடித் திரிந்தவளை ஆண்களில் இருந்து பிரித்து வைப்பதற்காக..

2 - எனது வீட்டில் ஒரு குமர் இருக்கிறாள். மணமகன்மார் பெண் கேட்டு வரலாம் என்பதைத் தெரியப் படுத்துவதற்காக..

3- ருதுவானால்தான் அவள் முழுமையான பெண் என்ற உடல் ரீதியான அங்கீகாரம் சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்பதற்காக...
என்று காரணங்கள் நீண்டன.

இப்படியான கருத்துக்களின் மத்தியில்,
"இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள்தான் அவளைக் காக்க வேண்டும்" என்று சொல்லி ஊர்மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பதற்காக... சாமத்தியச் சடங்கு நடக்கிறது.
என்றும் ஒரு புலம் பெயர்ந்த பெரியவர் சொன்னார்.

இப்படியானதொரு கருத்தைக் கேட்க..., சிரிப்பாக இல்லை...! கற்றவர் ஆழ்ந்து ஆராய்ந்து ஆக்க பூர்வமானதொரு கருத்தை ஆணித்தரமாகத் தருவார் என்று தான் எதிர் பார்த்தேன். கருத்துக்கள் தருவது அவரவர் சுதந்திரம். ஆனால் எம்மத்தியில் உள்ள கற்றவர்கள் இப்படியான உப்புச் சப்பற்ற கருத்துக்களைத் தருவது எமது சமூகத்தை, எமது கலாசாரத்தை, எமது பண்பாட்டை நாமே அவமானப் படுத்துவதற்குச் சமானமாகிறது.

குறை பிடிக்கவும், குற்றம் பிடிக்கவும், பருவம் பார்த்துத் தருணம் தேடி பெண்ணைச் சீரழிக்கவுமே சமூகத்துள் ஒரு கழுகுக் கூட்டம் காத்திருக்கும். ஊரவர்தான் அப்படியென்றால் உள்ளுக்குள் அதைவிடக் கேவலம்.

அனேகமான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் வீட்டுக்குள்தான் நடக்கின்றன. மாமாவால், சித்தப்பாவால், அக்காவின் கணவனால், அப்பாவின் நெருங்கிய நண்பனால்..... இப்படித்தான் பெரும் பான்மையான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் அரங்கேறியுள்ளன. இன்னும் இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வெளிநாட்டவர் மத்தியில் ஓரளவுக்காவது இவை வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால் எம்மவரிடையே இவை குமுறல்களாகவும், கோபங்களாகவும் ஆற்றாமையாகவும் பெண்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றன.

இவைகளை வெளியில் சொல்லி கலாச்சாரம், பண்பாடு, என்று வாயளவில் உச்சரித்து மனதுள் போலியாக வாழும் மனிதமல்லாதவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிய எம் பெண்களிடம் தைரியம் இல்லை. வெளியில் தெரிந்தால் சமூகமும், அதன் கலாச்சாரமும், அதன் பண்பாடும், பாதிக்கப் பட்ட பெண்ணையே பாழுங்கிணற்றில் தள்ளி விடும் என்ற பயம்.

இந்த நிலையில் நன்கு யோசித்துப் பாருங்கள்.
ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள எமது கலாச்சாரமும் பண்பாடும் உதவுகிறதா? அல்லது விழிப்புணர்வும் தைரியமும் உதவுகிறதா?
என்று.

எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் காத்து, எமது முகங்களை அழிய விடாது காப்பது ஆண், பெண் இருபாலாரதும் கடமை. அதற்காகப் போலிகளை, கலாச்சாரம், பண்பாடு என்று பொய்யாகப் பெயர் சூட்டி பெண்களில் திணித்து அவர்களை அடக்க நினைப்பது மடமை. இந்தப் பொய்களின் வேசம் புரியாது, போலிக் கலாச்சாரங்களில் தம்மைப் புதைத்துக் கொள்வது எம் பெண்களின் அறியாமை.

முதலில் எமது பெண்பிள்ளைகளிடம், எந்தப் பிரச்சனையையும் பெற்றோருடன் பேசி தம்மை நெருங்கும் துட்டர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் தைரியம் வர வேண்டும். பெற்றோர்களுடன் அவர்கள் இப்படியான விடயங்களை இயல்பாகப் பேசும் துணிவு ஏற்படும் படியாகப் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.

எமது முன்னோர்கள் வரையறுத்த அனேகமான கோட்பாடுகள் அர்த்தமுள்ள, அவசியமான விடயங்களுக்காகவே இருந்தன. அவைகள் ஒவ்வொன்றுக்குமான கரு ஆரோக்கியமானதாகவும் அழகியதாகவும் இருந்தது.

ஆனால் நீண்ட கால ஓட்டத்தில், காரணங்கள் திரிபு பட்டது மட்டுமல்லாது காரியங்களும் ஆணாதிக்க மேலோங்கலில் மிகுந்ததொரு சுயநல நோக்குடன் கட்டாயமாகத் திரிக்கப் பட்டு, இன்றைய கால கட்டத்தில் ஏன்? எதற்கு? என்ற சிந்தனைகளெதுவுமின்றி, உண்மையான, தேவையான விடயங்கள் புறக்கணிக்கப் பட்டு, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் பொய்யான விடயங்கள் தொடர்கின்றன.

வருத்தமான விடயம் என்னவெனில் அனேகமான பெண்களுக்கு இந்தப் பொய்யான திணிப்புகளின் போலி வடிவம் புரிவதில்லை. தாம் போலிக் கலாசாரத்தில் பொசுங்கிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் எந்த வித பிரக்ஞையும் கொள்வதுமில்லை.

உண்மையில் சாமத்தியச் சடங்கை கோலாகலமாக ஹோல் எடுத்து விழாவாகச் செய்யும் அனேகமான பெற்றோருக்கு சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணம் என்னவென்றே தெரியாது.
1 - வீடியோ கமராவில் எடுப்பதற்கும்,

2 - என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டை விடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்கும்,

3 - இப்படிப் பெரிதாகச் செய்யாவிட்டால் என்ன நினைப்பார்கள் என்பதான போலி கௌரவத்துக்கும்,

4 - கொடுத்த மொய்யை திரும்பப் பெற்றுக் கடன் கழிப்பதற்கும்..,
என்றதான இன்னும் பல காரணங்களைக் காரணமாகக் கொண்டுதான், பூப்படைந்த பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து இன்று புலம்பெயர்மண்ணில் பெரும்பாலான சாமத்தியச்சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்கு வெறுமே கலாசாரம், பண்பாடு என்று போலி முலாம் பூசப் படுகிறது. அவ்வளவுதான்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறுகிறார்கள் -
ருதுவாகும் பருவத்தில், ஒரு பெண் பிள்ளையின் உளத்திலும், உடலிலும் பல் வேறு மாறுதல்கள் ஏற்பட்டு அவள் ஒரு அசாதாரண நிலைக்குத் தள்ளப் படுகிறாள். இந்த அசாதாரண நிலை அவள் மனதை மேலும் குழப்பாத வகையில், பெற்றோர்கள் "இது சாதாரண விடயந்தான்" என்பதை அவளுக்கு விளங்கப் படுத்த வேண்டும். தாழ்வு மனப்பான்மையோ தற்பயமோ அவளுக்கு ஏற்படாத வகையில் அவளுடன் நிறையப் பேச வேண்டும். ஆதரவுடன் நடக்க வேண்டும் என்றும்.

இந்த நேரத்திலான அவளின் உடலின் அதீத வளர்ச்சியினால் அவள் தோள்மூட்டுகளிலும், முதுகுப் பகுதியிலும் ஏற்படும் உபாதைகளின் தன்மையை உணர்ந்து அவளுக்குத் தாராளமான ஓய்வைக் கொடுக்க வேண்டும். அவளின் தோள்மூட்டுக்களும், முதுகும் வலுப்பெறக் கூடிய வகையில் சில உடற் பயிற்சிகளை அவள் செய்ய வழி சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும்..

யேர்மனியப் பாடசாலை உளவியல் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் -
பூப்படையும் நிகழ்வை சாதாரண நிகழ்வாக எடுக்காமல் இப்படிப் பெருவிழாவாகக் கொண்டாடிப் பெரிது படுத்தும் போது, அது அந்தப் பெண்பிள்ளைகளின் மனதில் பல்வேறு பட்ட சலனங்களையும், உளவியற் தாக்கங்களையும் ஏற்படுத்தி அந்தப் பிள்ளைகளைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்ல வழி கோலுகின்றது என்று.

ஆனால் இங்கே புலத்தில் என்ன நடைமுறைப் படுத்தப் படுகிறது? பல அத்தியாவசியத் தேவைகளை பெண்பிள்ளைகள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அத்தனையையும் விடுத்து வெறுமே சாமத்தியச் சடங்கு என்ற பெருவிழா நடாத்தப் படுகிறது. இப்படிச் செய்வதால் அந்தப் பெண்பிள்ளைகள் என்ன பயனைப் பெறுகிறார்கள்?

இதைச் சண்டையாகவோ, ஆண் பெண் பாலாருக்கிடையிலான விவாதமாகவோ எண்ணாமல் யதார்த்தமாக எல்லாப் பெற்றோர்களும் சிந்தித்துப் பாருங்கள்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறிய இந்த ஆதரவுகள் பெற்றோர்களிடமிருந்து கிடைக்காத பட்சத்தில்தான் பெண்பிள்ளைகள் மற்றவர்கள் மேல் கோபப் படுபவர்களாகவும், எரிச்சால் படுபவர்களாகவும் காணப்படுகிறார்கள். அல்லாதுவிடில் அழுமூஞ்சிகளாகி விடுகிறார்கள்.

இந்த உடல் ரீதியான மாறுதல்கள் ஆண்களிடமும் ஏற்படுகிறதுதான். அது சற்று வேறுபாடானதாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த நேரத்தில் அன்பு ஆறுதல் அரவணைப்பு என்பன தேவைப் படுகின்றன. அது கிடைக்காத பட்சத்தில்தான் அவர்களும் எரிச்சல், கோபம், மௌனம் என்பவற்றிற்கு ஆளாகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு வெளியில் செல்லவும் அவர்கள் விரும்பியதைச் செய்யவும் தாராளமான சுதந்திரம் இருப்பதால் பெண்பிள்ளைகளிடம் ஏற்படுமளவுக்கு பாதிப்பு ஆண்பிள்ளைகளிடம் ஏற்படுவதில்லை.

அதனால் முக்கியமாக, கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளைக் கட்டி வைக்கும் எமது சமூக அமைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் எமது பெண்பிள்ளைகளுக்கு இந்த சமயத்தில் பெற்றோரினது முழுஆதரவும் தேவை என்பதை தமிழ்ப் பெற்றோர்கள் மறந்து விடவோ அலட்சியப் படுத்தி விடவோ கூடாது.

சந்திரவதனா
யேர்மனி
28.3.2001

Freitag, Juli 01, 2005

இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்

இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள்.

இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது.

ஆங்காங்கு ஓரிரு பெண்களுக்கு சந்திரமண்டலத்தில் காலடி வைக்கவும், ரெயின் ஓட்டவும், விமானமோட்டவும், ஏன்...! இன்னும் பெண்களால் முடியாதென்று சொல்லி வைத்த வேலைகளிலெல்லாம் தடம் பதிக்கவும் அனுமதி கிடைத்தாலும், அவை சாதனைகளாகவே அமைந்தாலும், மிகுதி ஒட்டு மொத்தப் பெண்களுக்கும் இவைகளையே சுட்டிக் காட்டி வெறுமனே கண்துடைப்புத்தான் செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இன்னும் எத்தனையோ பெண்கள் அடக்கப் பட்டுக் கொண்டும் ஒடுக்கப் பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

பெண்கள் மீதான அநீதியும் அடக்குமுறையும் உலகெலாம் பரந்து இருக்கும் அதே வேளையில், ஆங்காங்கு பலபெண்கள் தம்பலம் உணர்ந்து, தாழ்வு மனப்பான்மை துறந்து வாழ்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

பின் வளவுக்குப் போகவே துணை தேடிய எமது தாயகப் பெண்கள் இன்று எம் மண்ணிலே நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆணுக்கு நிகராக ஆயுதந்தூக்கி வீரியத்துடன் போராடுகிறார்கள். தாமே போர்க்கப்பல்களைத் தயாரித்து எந்த ஆண் துணையும் இன்றி தாமே அதைக் கடலில் இறக்கி.... தனித்து நின்று தைரியமாக போரியலில் காவியம் படைக்கிறார்கள். சமூகத்தின் போலிக் கலாச்சார அடக்கு முறைகளைத் தூக்கியெறிந்து, அநீதி என்று கண்டதை வெட்டிச் சாய்த்து தாய் மண்ணுக்காய் உயிரை விடுவதும் போராட்டக் களங்களிலும் ஆங்காங்கு வேறு கல்வி கலை, சார்ந்த இடங்களில் சாதனை புரிவதும் என்று பெண் இனத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் எமது தமிழ்ப் பெண்களின் விகிதாசாரத்தில் அவர்கள் மிகவும் சொற்பமானவர்களே! அவர்கள் தவிர்ந்த எஞ்சியுள்ள பெண்கள் மீதான அடக்குமுறைகளும் வன்முறைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

எல்லாப் பொருட்களையும் பணம் பெறுவதற்காக விற்பார்கள். கல்யாண சந்தையில் மட்டும் பெண் என்ற உயிர்ப்பொருள் பணம் கொடுத்து இன்னொருவனுக்குச் சுகம் கொடுப்பதற்காக விற்கப் படும்.

இந்த வேடிக்கையான விற்பனைச் சந்தையில் திருமண பந்தத்தில் இணைந்தால்தான் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலையில், தாய் தந்தையரின் திருப்திக்காகவேனும் திருமணத்துக்கு முகம் கொடுப்பதற்காக, முகம் தெரியாத பொறுப்பற்ற கணவன்மார்களிடம் வாழ்வைத் தொலைத்து ஜடமாகிப் போன எமது தமிழ்ப் பெண்கள் எத்தனையோ பேர். இவர்கள் புலத்தில் மட்டுமல்ல. போரியலில் புதுச் சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் எமது தாய்நிலத்திலும் இன்னும் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள். ஆனாலும் புலத்தில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

பிரச்சனை என்று வரும் போது தாய்நிலத்தில் உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் என்ற பக்கத் துணைகளும் அவர்களது உதவிகளும் ஓரளவுக்காவது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கிறது. ஆனால் இங்கே புலத்தில் கணவன் என்ற ஒருவனை மட்டும் நம்பி கனவுகளைச் சுமந்து வந்த தமிழ்ப்பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் அவலத்துக்குரியதாகவும் அமைந்து விடுகிறது.

எதைச் செய்ய நினைத்தாலும் கருவிலேயே ஆரம்பிக்கப் பட்ட, "நீ பெண்! அதனால்..." என்ற திணிப்புக்கள் பதியப் பட்ட மூளையிடமிருந்து மீளமுடியாததொரு குற்ற உணர்வினாலும், கணவன், சமூகம் இணைந்த ஒரு கும்பலின் பல் வேறுவிதமான அழுத்தங்களை எதிர் நோக்க முடியாத ஆனால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையினாலும், துரோகங்களினால் ஏற்படும் ஏமாற்றங்களினாலும் இவர்கள் துவண்டு நட்டாற்றில் விடப்பட்ட வள்ளங்கள் போலத் தள்ளாடிப் போகிறார்கள்.

தம்மை வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களாகத் தாமே கருதி விரக்தியடைந்து உளவியற் தாக்கங்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த உளவியற் தாக்கங்களுக்கு எந்த விதமான சிகிச்சைகளும் கிடைக்காத ஒரு காலகட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மெதுமெதுவாக மனநோயாளிகளாகித் தற்கொலைக்குத் தயாராகியும் விடுகிறார்கள்.

இதனால் இன்று புலத்தில் கலாச்சாரம் என்ற போலி வேலிக்கு நடுவே தற்கொலை என்ற சமாச்சாரம் ஆழ வேரூன்றி விட்டிருக்கிறது. ஏன் இது தமிழ் சமூகத்தில் அடிக்கடி ஏற்படுகிறது என ஐரோப்பியர்கள் ஆராய்ச்சி செய்யுமளவுக்கு துன்பியல் நிறைந்த இந்தத் தற்கொலைச் சமாச்சாரம் புலத்தில் பிரபல்யமானதொன்றாகி விட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவம் -
19 வயது மட்டுமே நிரம்பிய அந்தப் பெண் தாய்க்கு ஒரு மகளாம். யேர்மனிய மாப்பிள்ளையிடம் என்று சொல்லி சகல சீதன சம்பிரதாயங்களுடன் கனவுகளையும் சுமந்து கொண்டு இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். வந்த பின்தான் கணவனுக்கு வேற்று நாட்டைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. எந்தப்
பெண்ணால்தான் இதைத் தாங்க முடியும்.

இவள் வந்த பின்னாவது அவன் அந்தப் பெண்ணை விட்டு வந்து இவளுடன் ஒழுங்காகக் குடும்பம் நடத்தியிருக்காலம். அவன் அதைச் செய்ய வில்லை. தான் ஆண் என்ற திமிர்த்தனத்துடன் இருவருடனும் குடித்தனம் நடத்தியிருக்கிறான். அதுமட்டுமல்லாமல் அடி உதைகளால் அவள் வாயைக் கட்ட முனைந்திருக்கிறான். இந்தக் கொடுமையினால் மனம் துடித்த அந்தப் பெண் அக்கம் பக்கம் உள்ள தமிழ்க் குடும்பங்களிடம் சாடைமாடையாக தனது மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறாள்.

ஒரு ஆண் என்ன செய்தாலும் பிரச்சனையில்லை. பெண் சரியாக நடக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்கள்தானே எம்மவர்கள். அவர்கள் அவளை அனுசரிச்சுப் போகும் படியும் சமாளிக்கும் படியும் புத்தி சொல்லியுள்ளார்கள்.

அவளை, அவள் வாழும் நாட்டின் மொழி படிக்கவோ அல்லது ஏதாவது வேலைக்குப் போகவோ அந்தக் கணவன் அனுமதிக்கவில்லை. அதனால் அவளுக்கு யேர்மனியரிடம் தனது பிரச்சனையைச் சொல்லி உதவி கேட்குமளவுக்குப் பாசை தெரியாது. யாருடனும் பரிட்சயமும் கிடையாது.

இந்த நிலையில் கணவன் என்பவன் இன்னொருத்தியிடம் போய் விட்டான் என்பது தெரிந்த பொழுதுகளில், தனியாக வீட்டில் இருந்து அலை மோதும் கொடிய நினைவுகளோடு போராடிக் கொண்டு எத்தனை காலத்துக்குத்தான் ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியும்...?

முழுமையான இரண்டு வருடம் கூட அவள் வாழ்வு இங்கே நீளவில்லை. தனியான ஒரு பொழுதில் கழுத்துக்குக் கட்டும் சால் எனப்படும் சால்வை போன்ற நீண்ட துண்டை தான் வாழும் இரண்டாவது மாடியின் யன்னலில் கொழுவி அதைத் தன் கழுத்தில் போட்டுத் தொங்கி தன்னை மாய்த்துக் கொண்டு விட்டாள்.

இவள் இறப்புக்கு யார் காரணம்? கணவன் என்ற கயவன் முதற் காரணமாக இருந்தாலும், அவன் மட்டுமல்ல அந்தப் பெண்ணின் இறப்புக்குக் காரணம். பாரா முகமாய் இருந்த எமது தமிழ்ச் சமூகமும்தான்.

அந்தப் பெண்ணுக்கு அவர்கள் ஆறுதல் கூறியிருக்கலாம். நிலைமை மோசமாகும் கட்டத்தில் அவள் தற்கொலை வரை போகாத படிக்கு அவளை ஒரு பெண்கள் பாதுகாப்பு நிலையத்தில் சேர்த்து விட்டிருக்கலாம். ஆனால் செய்ய வில்லை. அசிரத்தையாக இருந்து விட்டார்கள். மறைமுகமாக ஒரு கொலைக்குத் துணை போயிருக்கிறார்கள்.

இவைகள் மட்டு மல்ல. புலத்தில் இப்போதெல்லாம் பல புதுப் புதுக் கலாச்சாரங்கள் முளை விடவும் கிளை விடவும் தொடங்கியிருக்கின்றன.

அவற்றில் ஒன்று, மனைவியை வீட்டில் வைத்து விட்டு கணவன் என்பவன் வேறு பெண்களைத் தேடிச் சென்று அரட்டை அடித்து வருவது. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது போன்ற செயற்பாடுகள். இது பற்றி மனைவி அறிந்து கேட்டால் அவளை அடியால் உதையால் வார்த்தையால் அடக்கி விடுவது.

இதனால் மனைவி என்பவள் சமைப்பவள், படுக்கை விரிப்பவள்... என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு அதிலிருந்து விலக முடியாமலும், அடி உதை நச்சரிப்பு போன்ற வதைகளிலிருந்து மீள முடியாமலும் ஒரு வேலைக்காரி போன்றதான பிரமையைத் தனக்குள் தானே வளர்த்துத் தனித்து வாழ்கிறாள்.

வெளியில் சொன்னால் மானம் போய்விடும்...! என்ன நினைப்பார்கள்...? என்றதான போலிக் கௌரவத்துக்குள் தன்னைப் புதைத்து விடுகிறாள். கணவனை விட்டுப் போனால் கலாச்சார வேலி தாண்டி விட்டாள் என சமூகம் சொல்லும் எனப் பயந்து உள்ளுக்குள்ளேயே தன்னை ஒடுக்கி உடைந்து போகிறாள்.

இப்படியாக, எமது பெண்கள் இதை யாருடனும் பேசாது தற்கொலை வரை போவதற்கும் எமது சமூகமே முக்கியமான காரணமாகிறது. பாதிக்கப் பட்டவளுக்கு உதவுவதை விட அவள் ஆற்றாமை தாங்காது தன் வீட்டுப் பிரச்சனையை சொல்லி உதவி கேட்கும் போதோ அல்லது மன ஆறுதல் தேடும் போதோ அதைக் கேலிக்குரிய விடயமாக எடுத்து மற்றவருடன் சேர்ந்து பாதிக்கப் பட்ட பெண்ணையே பரிகசிக்கத் தொடங்கி விடும் எமது சமூகம் இது விடயத்தில் பாரிய குற்றவாளியாக தன் மேல் முத்திரை குத்திக் கொள்கிறது.

தற்கொலை என்று நடைபெறும் போது அதிர்ச்சியில் வாய்பிழந்து விட்டு, அடுத்த நிமிடமே அந்தப் பெண் மேல் இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் கட்டி விட்டு நின்று வேடிக்கை பார்க்கிறது.

இதுவே கணவன் என்ற பெயரில் பெண்களை வதம் செய்யும் ஆடவர்க்கு நல்ல சாதகமாகி விடுகிறது. இறந்தவள் மனநோயாளி. அவள் இங்கே வந்ததிலிருந்து இப்படித்தான். எல்லாத்துக்கும் சந்தேகம்தான்... என்பது போன்றதான கணவனின் பொய் பிரச்சாரத்துக்கு உறுதுணையாகிவிடுகிறது.

இந்த நிலை மாற வேண்டும். எமது சமூகம் திருந்த வேண்டும். பிரச்சனைகளில் வீழ்ந்து போன பெண்களைக் காக்க சமூகம் ஆரோக்கியமான பிரயோசனமான உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும். ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்று வரும் போது அதைத் தமக்கு வந்ததாக எண்ணி உடனடியாக அதைத் தடுப்பதற்கான வழிகளில் தம்மை ஈடு படுத்த வேண்டும். வலிந்து உதவ வேண்டும்.

ஊரென்ன சொல்லும்? உலகமென்ன சொலலும்? சமூகமென்ன சொல்லும்? என்று தாமே தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் விலங்கிடும் பேதைத்தனம் பெண்களிடமிருந்து ஒளிய வேண்டும். அதற்கான தைரியத்தை சுற்றியுள்ள சமூக உறுப்பினர்கள் வலுவோடு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும்.

தமது பிரச்சனைகளை மற்றவர்களுடன் பேசும் துணிவும் தைரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும். தமது பிரச்சனைகளை மட்டுமின்றி தம்மைச் சுற்றியுள்ள மற்றைய பெண்களின் பிரச்சனைகளையும் கூடத் தயக்கமின்றி வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

நாம் என்ன செய்கிறோம்? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்பதையும், உண்மை , நேர்மை, கடமை, கண்ணியம், சரியெனப் பட்டதைச் செய்யும் துணிவு, நினைத்ததை செயற்படுத்தும் தைரியம், அறிவார்ந்த செயற்பாடு... இப்படியான விடயங்கள்தான் எமது வாழ்வுக்குத் தேவை என்பதையும், யாருக்கும் பயந்து வாழ்ந்தோமேயானால் எமக்கான வாழ்வு இல்லாமல் போய்விடும், என்பதையும் மன உளைச்சலினால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தன்னம்பிக்கையை முடிந்தவரை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

இப்படியான செயற்பாடுகளால்தான் இந்தத் தற்கொலைக் கலாசாரத்திலிருந்து நாம் எம்மை மீட்டுக் கொள்ள முடியும்.

எமது சமூகத்தில் உள்ள இன்னொரு பெரிய பிழையும் பிரச்சனையும் என்ன வென்றால் அனேகமான ஆண்கள் தமது கூடிய பொழுதை வெளியிலேயே கழிக்கிறார்கள். ஒரு சாராருக்கு நாள் முழுக்க வேலையென்றால் இன்னொரு சாரார் வேலை முடிய வெளியில் நண்பர்களிடம் சென்று விடுகிறார்கள். இன்னும் சிலரோ நண்பர்களையே வீட்டுக்கு அழைத்து வந்து வரவேற்பறையிலோ சாப்பாட்டு மேசையிலோ இருந்து அரட்டை அடிக்கவோ குடிக்கவோ தொடங்கி விடுகிறார்கள்.

இந்த வெளியுலகமும், பொழுது போக்கும் ஆண்களுக்கு மட்டுமே என்பதான பிரமை எமது சமூகத்தில் ஏற்படுத்தப் பட்டு விட்டது. இந்தப் பிரமையின் பாதிப்பை பல ஆண்கள் உணர்ந்து கொள்வதும் இல்லை. இதனால் அவர்களது மனைவியர் தனிமைப் படுத்தப் படுவதைப் புரிந்து கொள்வதும் இல்லை.

மனைவி என்பவள் சமையல், சாப்பாடு, உடைகள்... நேரம் கிடைத்தால் தொலைக்காட்சி அல்லது வானொலி போன்றவைகளுடனேயே வாழ்கிறாள். கணவன் வீட்டில் நிற்கும் நேரத்தில் கூட தனிமைதான் அவளுக்குத் துணையாகிறது.

கணவனும் அவரது நண்பர்களும் வீட்டில் நிற்பதால் ஒரு மனைவி மன நிறைவாக இருக்கிறாள் என்றும் கலகலப்பாக இருக்கிறாள் என்றும் கருத்துக் கொள்ள முடியாது. கணவன் என்பவன் தன்னோடு கூட இருந்து மனம் விட்டுப் பேசி வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் பங்கு கொள்ளும் போதுதான் ஒரு மனைவி தனக்கென ஒருவன் இருப்பதை உணர்கிறாள்.

ஆனால் எம்மவர்களில் எத்தனை பேர் மனைவியின் ஒவ்வொரு வேலையிலும் பங்கெடுக்கிறார்கள். எத்தனைபேர் ஒவ்வொரு நாளும் ஒரு கொஞ்ச நேரத்தையாவது மனைவிக்காக ஒதுக்கி அவளை அழைத்துக் கொண்டு வெளியில் போய் ஒரு ரம்மியமான இடத்திலிருந்து கதைத்து விட்டு வருகிறார்கள். எத்தனை பேர் குடும்பம் என்ற கூட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஓட்டு மொத்தக் கணவன்மாரும் அப்படி ஏனோதானோ என்று நடந்து கொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையான கணவர்கள் "இஞ்சரும், நான் கொஞ்சம் வெளியிலை போட்டு வாறன். " என்று சொல்லி தாம் மட்டுமாய் வெளியில் போய் விட்டு வருகிறார்கள். `என்னால் இந்த சொற்ப நேரத்தில் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. எனது மனைவி நாள் முழுக்க வீட்டில் இருக்கிறாளே! அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டுமே!` என்று. அனேகமான எந்தக் கணவன்மாரும் யோசிப்பதில்லை.

உழைப்பு, பணம்... இவைகள் மட்டுந்தான் குடும்பம் என்ற கோயிலின் தனித்துவங்கள் என்றும், இதனால் ஒரு பெண் திருப்திப் பட்டு விடுவாள் என்றும் ஆண்கள் நினைத்துக் கொண்டு செயற்பட எத்தனையோ ஆயிரம் புலம்பெயர் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி மனம் பொசுங்கிக் கிடக்கிறார்கள். இவர்கள் கூட நாளடைவில் உளவியற் தாக்கங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது.

அடுத்து, நாம் இங்கே எதிர் நோக்கும் பிரச்சனைகளில்... இப்படியான தனிமைப் படுத்தப் பட்ட பெண்களின் தனிமையைச் தமக்கு சாதகமாக்கி தமது நண்பனின் மனைவிக்கே வலை விரிக்கும் ஆண்கள்..., ரீன்ஏஜ் பருவத்தில் பெண்குழந்கைளிடம் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து ரீன்ஏஜ் குழந்தைகளுக்கே வலை விரிக்கும் அப்பாவின் நண்பர்கள்..., என்று புலத்தில் ஒரு பெரிய சீரழிவு தலை விரித்து ஆடுகிறது. இவைகளில் இருந்து எமது பெண் பிள்ளைகளும் இளம் பெண்களும் காப்பாற்றுப் பட விழிப்புணர்வு குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டப் பட வேண்டும். அந்தத் தலையாய கடமை பெற்றோரையே சார்ந்தது.

இது பற்றியதான ஒரு விளக்கத்தையும் இன்றைய எனது கட்டுரைக்குள் அடக்க நினைத்தால் கட்டுரை அளவுக்கதிகமாக நீண்டு விடும். அதனால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இவைகள் பற்றியதான விரிவான ஒரு பார்வையுடன் வருகிறேன்.

- சந்திரவதனா -
- 26.2.2003 -