Montag, Juli 18, 2005

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா?

பெற்றோரே சிந்தியுங்கள்!
இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?


புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த 21ம் நூற்றாண்டில், இத்தனை தூரம் நாம் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்றதான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான முறையில் கிடைக்க வில்லை.

பல பெரியவர்களுடன் சாமத்தியச்சடங்கு பற்றிப் பேசிப் பார்த்த போது ஒவ்வொருவரும் சொன்ன அதற்கான காரணங்கள், ஒவ்வொரு விதமாகவே இருந்தன.

1 - ஆண் பெண் பாகுபாடின்றி விளையாடித் திரிந்தவளை ஆண்களில் இருந்து பிரித்து வைப்பதற்காக..

2 - எனது வீட்டில் ஒரு குமர் இருக்கிறாள். மணமகன்மார் பெண் கேட்டு வரலாம் என்பதைத் தெரியப் படுத்துவதற்காக..

3- ருதுவானால்தான் அவள் முழுமையான பெண் என்ற உடல் ரீதியான அங்கீகாரம் சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்பதற்காக...
என்று காரணங்கள் நீண்டன.

இப்படியான கருத்துக்களின் மத்தியில்,
"இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள்தான் அவளைக் காக்க வேண்டும்" என்று சொல்லி ஊர்மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பதற்காக... சாமத்தியச் சடங்கு நடக்கிறது.
என்றும் ஒரு புலம் பெயர்ந்த பெரியவர் சொன்னார்.

இப்படியானதொரு கருத்தைக் கேட்க..., சிரிப்பாக இல்லை...! கற்றவர் ஆழ்ந்து ஆராய்ந்து ஆக்க பூர்வமானதொரு கருத்தை ஆணித்தரமாகத் தருவார் என்று தான் எதிர் பார்த்தேன். கருத்துக்கள் தருவது அவரவர் சுதந்திரம். ஆனால் எம்மத்தியில் உள்ள கற்றவர்கள் இப்படியான உப்புச் சப்பற்ற கருத்துக்களைத் தருவது எமது சமூகத்தை, எமது கலாசாரத்தை, எமது பண்பாட்டை நாமே அவமானப் படுத்துவதற்குச் சமானமாகிறது.

குறை பிடிக்கவும், குற்றம் பிடிக்கவும், பருவம் பார்த்துத் தருணம் தேடி பெண்ணைச் சீரழிக்கவுமே சமூகத்துள் ஒரு கழுகுக் கூட்டம் காத்திருக்கும். ஊரவர்தான் அப்படியென்றால் உள்ளுக்குள் அதைவிடக் கேவலம்.

அனேகமான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் வீட்டுக்குள்தான் நடக்கின்றன. மாமாவால், சித்தப்பாவால், அக்காவின் கணவனால், அப்பாவின் நெருங்கிய நண்பனால்..... இப்படித்தான் பெரும் பான்மையான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் அரங்கேறியுள்ளன. இன்னும் இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வெளிநாட்டவர் மத்தியில் ஓரளவுக்காவது இவை வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால் எம்மவரிடையே இவை குமுறல்களாகவும், கோபங்களாகவும் ஆற்றாமையாகவும் பெண்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றன.

இவைகளை வெளியில் சொல்லி கலாச்சாரம், பண்பாடு, என்று வாயளவில் உச்சரித்து மனதுள் போலியாக வாழும் மனிதமல்லாதவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிய எம் பெண்களிடம் தைரியம் இல்லை. வெளியில் தெரிந்தால் சமூகமும், அதன் கலாச்சாரமும், அதன் பண்பாடும், பாதிக்கப் பட்ட பெண்ணையே பாழுங்கிணற்றில் தள்ளி விடும் என்ற பயம்.

இந்த நிலையில் நன்கு யோசித்துப் பாருங்கள்.
ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள எமது கலாச்சாரமும் பண்பாடும் உதவுகிறதா? அல்லது விழிப்புணர்வும் தைரியமும் உதவுகிறதா?
என்று.

எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் காத்து, எமது முகங்களை அழிய விடாது காப்பது ஆண், பெண் இருபாலாரதும் கடமை. அதற்காகப் போலிகளை, கலாச்சாரம், பண்பாடு என்று பொய்யாகப் பெயர் சூட்டி பெண்களில் திணித்து அவர்களை அடக்க நினைப்பது மடமை. இந்தப் பொய்களின் வேசம் புரியாது, போலிக் கலாச்சாரங்களில் தம்மைப் புதைத்துக் கொள்வது எம் பெண்களின் அறியாமை.

முதலில் எமது பெண்பிள்ளைகளிடம், எந்தப் பிரச்சனையையும் பெற்றோருடன் பேசி தம்மை நெருங்கும் துட்டர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் தைரியம் வர வேண்டும். பெற்றோர்களுடன் அவர்கள் இப்படியான விடயங்களை இயல்பாகப் பேசும் துணிவு ஏற்படும் படியாகப் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.

எமது முன்னோர்கள் வரையறுத்த அனேகமான கோட்பாடுகள் அர்த்தமுள்ள, அவசியமான விடயங்களுக்காகவே இருந்தன. அவைகள் ஒவ்வொன்றுக்குமான கரு ஆரோக்கியமானதாகவும் அழகியதாகவும் இருந்தது.

ஆனால் நீண்ட கால ஓட்டத்தில், காரணங்கள் திரிபு பட்டது மட்டுமல்லாது காரியங்களும் ஆணாதிக்க மேலோங்கலில் மிகுந்ததொரு சுயநல நோக்குடன் கட்டாயமாகத் திரிக்கப் பட்டு, இன்றைய கால கட்டத்தில் ஏன்? எதற்கு? என்ற சிந்தனைகளெதுவுமின்றி, உண்மையான, தேவையான விடயங்கள் புறக்கணிக்கப் பட்டு, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் பொய்யான விடயங்கள் தொடர்கின்றன.

வருத்தமான விடயம் என்னவெனில் அனேகமான பெண்களுக்கு இந்தப் பொய்யான திணிப்புகளின் போலி வடிவம் புரிவதில்லை. தாம் போலிக் கலாசாரத்தில் பொசுங்கிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் எந்த வித பிரக்ஞையும் கொள்வதுமில்லை.

உண்மையில் சாமத்தியச் சடங்கை கோலாகலமாக ஹோல் எடுத்து விழாவாகச் செய்யும் அனேகமான பெற்றோருக்கு சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணம் என்னவென்றே தெரியாது.
1 - வீடியோ கமராவில் எடுப்பதற்கும்,

2 - என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டை விடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்கும்,

3 - இப்படிப் பெரிதாகச் செய்யாவிட்டால் என்ன நினைப்பார்கள் என்பதான போலி கௌரவத்துக்கும்,

4 - கொடுத்த மொய்யை திரும்பப் பெற்றுக் கடன் கழிப்பதற்கும்..,
என்றதான இன்னும் பல காரணங்களைக் காரணமாகக் கொண்டுதான், பூப்படைந்த பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து இன்று புலம்பெயர்மண்ணில் பெரும்பாலான சாமத்தியச்சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்கு வெறுமே கலாசாரம், பண்பாடு என்று போலி முலாம் பூசப் படுகிறது. அவ்வளவுதான்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறுகிறார்கள் -
ருதுவாகும் பருவத்தில், ஒரு பெண் பிள்ளையின் உளத்திலும், உடலிலும் பல் வேறு மாறுதல்கள் ஏற்பட்டு அவள் ஒரு அசாதாரண நிலைக்குத் தள்ளப் படுகிறாள். இந்த அசாதாரண நிலை அவள் மனதை மேலும் குழப்பாத வகையில், பெற்றோர்கள் "இது சாதாரண விடயந்தான்" என்பதை அவளுக்கு விளங்கப் படுத்த வேண்டும். தாழ்வு மனப்பான்மையோ தற்பயமோ அவளுக்கு ஏற்படாத வகையில் அவளுடன் நிறையப் பேச வேண்டும். ஆதரவுடன் நடக்க வேண்டும் என்றும்.

இந்த நேரத்திலான அவளின் உடலின் அதீத வளர்ச்சியினால் அவள் தோள்மூட்டுகளிலும், முதுகுப் பகுதியிலும் ஏற்படும் உபாதைகளின் தன்மையை உணர்ந்து அவளுக்குத் தாராளமான ஓய்வைக் கொடுக்க வேண்டும். அவளின் தோள்மூட்டுக்களும், முதுகும் வலுப்பெறக் கூடிய வகையில் சில உடற் பயிற்சிகளை அவள் செய்ய வழி சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும்..

யேர்மனியப் பாடசாலை உளவியல் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் -
பூப்படையும் நிகழ்வை சாதாரண நிகழ்வாக எடுக்காமல் இப்படிப் பெருவிழாவாகக் கொண்டாடிப் பெரிது படுத்தும் போது, அது அந்தப் பெண்பிள்ளைகளின் மனதில் பல்வேறு பட்ட சலனங்களையும், உளவியற் தாக்கங்களையும் ஏற்படுத்தி அந்தப் பிள்ளைகளைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்ல வழி கோலுகின்றது என்று.

ஆனால் இங்கே புலத்தில் என்ன நடைமுறைப் படுத்தப் படுகிறது? பல அத்தியாவசியத் தேவைகளை பெண்பிள்ளைகள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அத்தனையையும் விடுத்து வெறுமே சாமத்தியச் சடங்கு என்ற பெருவிழா நடாத்தப் படுகிறது. இப்படிச் செய்வதால் அந்தப் பெண்பிள்ளைகள் என்ன பயனைப் பெறுகிறார்கள்?

இதைச் சண்டையாகவோ, ஆண் பெண் பாலாருக்கிடையிலான விவாதமாகவோ எண்ணாமல் யதார்த்தமாக எல்லாப் பெற்றோர்களும் சிந்தித்துப் பாருங்கள்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறிய இந்த ஆதரவுகள் பெற்றோர்களிடமிருந்து கிடைக்காத பட்சத்தில்தான் பெண்பிள்ளைகள் மற்றவர்கள் மேல் கோபப் படுபவர்களாகவும், எரிச்சால் படுபவர்களாகவும் காணப்படுகிறார்கள். அல்லாதுவிடில் அழுமூஞ்சிகளாகி விடுகிறார்கள்.

இந்த உடல் ரீதியான மாறுதல்கள் ஆண்களிடமும் ஏற்படுகிறதுதான். அது சற்று வேறுபாடானதாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த நேரத்தில் அன்பு ஆறுதல் அரவணைப்பு என்பன தேவைப் படுகின்றன. அது கிடைக்காத பட்சத்தில்தான் அவர்களும் எரிச்சல், கோபம், மௌனம் என்பவற்றிற்கு ஆளாகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு வெளியில் செல்லவும் அவர்கள் விரும்பியதைச் செய்யவும் தாராளமான சுதந்திரம் இருப்பதால் பெண்பிள்ளைகளிடம் ஏற்படுமளவுக்கு பாதிப்பு ஆண்பிள்ளைகளிடம் ஏற்படுவதில்லை.

அதனால் முக்கியமாக, கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளைக் கட்டி வைக்கும் எமது சமூக அமைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் எமது பெண்பிள்ளைகளுக்கு இந்த சமயத்தில் பெற்றோரினது முழுஆதரவும் தேவை என்பதை தமிழ்ப் பெற்றோர்கள் மறந்து விடவோ அலட்சியப் படுத்தி விடவோ கூடாது.

சந்திரவதனா
யேர்மனி
28.3.2001

7 Kommentare:

Anonym hat gesagt…

நல்ல பதிவு.
சரியாகச் சொன்னீங்க.

வசந்தன்(Vasanthan) hat gesagt…

இது ஆழமான, சிக்கலான விவாதப் பொருள். என்னைப்பொறுத்தவரை தேவையில்லையென்பதுதான் என் பதில். இதுகுறித்து ஆழமாக எதுவும் சொல்லமுயலவில்லை.

பெரும்பாலும் பின்னாளில் குறிப்பிட்ட பெண்பிள்ளை அச்சடங்கு குறித்து சங்கடப்படுகிறாள் என்றே நினைக்கிறேன்.

தமிழரங்கம் hat gesagt…

சாமத்தியச் சடங்கு ஊடான கலாச்சார விபச்சாரமும்
www.tamilcircle.net


நேபாளத்தில் ஷஷநேற்றைய குமாரிகள்|| ஷஷவாழ்வைத் தேடும் முன்னாள் தெய்வங்கள்|| என்ற தலைப்பில் முதல் மாதவிடாய்க்கு பின் அரண்மனைக்கு வெளியில் தூக்கி வீசப்படும் இவர்கள் பெருமளவில் விபச்சாரியாக அல்லது திருமணம் இன்றி வாழ்கின்றனர்.(21.1.1997)50 நேபாளத்தில் குழந்தையிலேயே தெய்வத்துக்கு காணிக்கையாக்கப்பட்ட பெண்கள் சிறுமியிலேயே அழகுமயப்படுத்தப்படுகின்றனர்;. இது இந்தியாவில் இந்து பண்பாட்டில் தேவதாசிகளை உருவாக்குவது போல் இங்கு அதற்காகவே பருவமடைய முன் பயன்படுத்தப்படுகின்றாள். இப்பெண்கள் பருவமடைந்த பின் தூக்கி வீசப்படும் அதே நேரம் பகிரங்கமான விபச்சாரியாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றாள். பருவம் அடையும் வரையிலான வசதியான வாழ்க்கை. பின்னால் பகிரங்கமான விபச்சாரி. இதுவே சாதாரண சாமத்திய சடங்கிலும் பொதுப்பண்பாகும்.

சாமத்திய சடங்கின் பெயரால் ஆணாதிக்கம் பெண்களுக்குப் போடும் பொன் விலங்கு பலவிதத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இந்தச் சடங்கு பணம் வசூலிப்பதிலும், ஆணாதிக்கத்தை உறுதிப்படுத்துவதிலும் கவனமாக உள்ளது. ஒரு தனிநபர் திருமணத்திலோ, சாமத்திய சடங்கிலோ, பிறந்ததின கொண்டாட்டத்திலோ.. இது போன்றவற்றிலோ பணம் வாங்குவதும், செய்வதும் சமூக நோக்கமல்ல சுயநலன் மட்டுமே அரங்கேறுகின்றது. இதில் குறிப்பாக சாமத்திய சடங்கில் வாங்கும் போதும், செய்யும்போதும் அதன் அர்த்தம் பல உண்டு.

சாமத்திய சடங்கை நியாயப்படுத்தும் போது பெண்ணின் திருமணத்தை பார்க்க முடியாது போய்விடும் அல்லது ஒரு மகிழ்வான நிகழ்வை ஏன் செய்யக் கூடாது. எமது கலாச்சார கட்டுப்பாடுகளை பிள்ளைக்கு உணர்த்துவதற்கு, சீரழிவில் இருந்து பாதுகாக்க, என பலவற்றை சாமத்திய சடங்கை நியாயப்படுத்த முன்வைக்கின்றனர்.

ஏன் இதை பெண் குழந்தைக்கு மட்டும் செய்கின்றனர்?. இதை ஏன் ஆண் குழந்தைக்கு செய்வதில்லை?. அங்கு இந்த காரணங்கள் இல்லையோ? இதில் இருந்து புரிகின்றது தமது ஆணாதிக்கத்தை தக்கவைக்க, ஆணாதிக்க தமிழ் பண்பாடு, கலாச்சாரம் தகர்கின்ற போது எழுகின்ற ஆணாதிக்க புலம்பலாகின்றது.

ஒரு பெண் குழந்தை சாமத்தியம் அடைகின்றாள் என்றால் என்ன?. அக்குழந்தை இனவிருத்திக்குரிய விந்தை உற்பத்தி செய்து, அது இறக்கும் போது வெளியேற்றும் முதல் கழிவுக்குரிய நிகழ்வுதான் சாமத்தியமாகின்றது. இதைத் தான் கொண்டாட வேண்டும் என்கின்றனர் தமிழ் கலாச்சார ஆணாதிக்கவாதிகள்;. இந்த கழிவு வெளியேறுவதால் என்ன தமிழ் பண்பாடு மற்றப் பெண்களிடம் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றது. இதனால் எப்படி பார்ப்பனிய தமிழ் பண்பாடு, கலாச்சாரம் உதித்தெழுந்து பாதுகாக்கின்றது. ஆணாதிக்கத்தை தவிர எதுவுமே அல்ல.

மாறாக பெண் புதிய அடக்குமுறைக்கு உள்ளாகின்றாள்;. பெண் விளம்பரப்படுத்தப்படுகின்றாள். ஒரு அழகு பொம்மையாக (மொடலிஸ்ற் ஆக) நிறுத்தப்படுகின்றாள். பெண்ணை விளம்பரம் செய்வதன் மூலம் பெற்றோர் தமது பணத்திமிரை காட்டுகின்றனர். மறு பக்கம் பணம் வறுகுவதும், வசூலிப்பதும், வாங்கியதை கொடுப்பதும் ஒரு வியாபாரம் தொடர்கின்றது. பணத்தை கேட்டோமா என்றபடி வாங்குவதை விமர்சிக்காது, நாசுக்காக பாதுகாக்கின்றனர்.

இது ஏன் விபச்சாரமாக, சீரழிவாக உள்ளது. ஒரு விபச்சாரி தன் உடலைக் காட்ட, தொட, உறவு கொள்ள ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட விபச்சாரத் தொழிலால் பணம் சேகரிக்கின்றாள். இங்கு இவ் விபச்சாரம் கூட பல ஆணாதிக்க சமூக காரணத்தால் ஏற்படுகின்றது. ஒரு பெண் குழந்தையை பெற்றோர் விபச்சாரி போல் பெண் உறவு கொள்ளவும் குழந்தை பெறமுடியும் என்ற விடயத்தை முன்நிறுத்தி பகிரங்கமாக விளம்பரம் போட்டு அதைப் பறைசாற்றி, அப்பெண்ணை பலர் முன் நிறுத்தி இலவசமாகவோ, பணத்துக்கோ முன் நிறுத்தும் போதே அது விபச்சாரத்தின் பகுதியாகிவிடுகின்றது. இதன்பின் ஒரு ஆண் அப்பெண்ணை பார்க்கும் விதமே முற்றிலும் வேறுபட்டது. அதாவது அப்பெண்ணை ஆண் பார்க்கும் பார்வை, பெண்ணின் உறுப்பில் ஏற்பட்ட மாற்றம் ஊடாக மட்டுமே (சாமத்திய சடங்கு) புதிதாக அடையாளம் காண்கின்றனர்.

நியாயப்படுத்தும் வாதங்கள் கேவலமானது. ஏன் ஆண் பிள்ளைக்கு செய்து மகிழலாமே!. அவனுக்கும் ஆண்மை விழிக்கிற நாளாக பார்த்து கொண்டாடலாமே!. ஏன் பெண்ணின் சட்டைக்குள் புகுந்து பெண் உறுப்புக்குள் புகுந்து ஏதாவது புதிய கழிவு வருகிறதா? எனத் தேடி அலைந்து கொண்டாடுகின்றார்கள். அந்த குழந்தையின் சுய அபிப்பிராயத்தை எத்தனை பெற்றோர் கேட்டு இருப்பர். அந்த பிஞ்சுகள் எப்படி இதை எதிர் கொள்கின்றன?. அக்குழந்தையின் உளவியல் பாதிப்பு என்ன? அக் குழந்தை தன்னோடு பழகிய ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடம், மற்றும் பெரியோரிடத்தில்; இதை எப்படி எதிர் கொள்வாள்? எப்படி சக ஆண் குழந்தை இதை பார்க்கும்? என எத்தனை பெற்றோர் சிந்திக்கின்றனர். பெற்றோர் இது பற்றி அறிவியலாக எதைத் தெரிந்து வைத்துள்ளனர்!. எதுவுமில்லை, அறியாமை, பிற்போக்கு சிந்தனையின் வெளிபாட்டால் பிறக்கும் ஆணாதிக்கம், சுயகௌரவமும், சுயநலனுக்கு வெளியில் எந்த மண்ணாங் கட்டியும் கிடையாது. இதை மூடிமறைக்க கலாச்சாரம் தேவையாகின்றது.

பெண்ணின் திருமணத்தை பார்த்தல் என்ற வாதத்தின் பின், ஆண் குழந்தையின் திருமணத்தை பேசவில்லை. பெண்ணின் திருமணம் என்றால் உங்கள் திருமணமா? பெண் சுயஅறிவுள்ள மனிதன்தானே?. இல்லாது மிருகமா?. மாட்டுக்கு நாணயம் போட்டு இழுத்துச் சென்று தேவையானவற்றுடன் உறவு கொள்ளவைப்பது போல், பெண்ணையும் செய்ய தமிழ் கலாச்சாரத்தை கூப்பிடுகிறீர்கள்!. தமிழ் கலாச்சாரம் என்றால் ஆணாதிக்கம் மட்டும்தானோ? ஒரு பெண் சுயமாக முடிவெடுக்க, சுதந்திரமாக வாழவிட தமிழ் கலாச்சாரம் அனுமதிக்காதோ! அதன் வேலிகள் உங்கள் பிற்போக்கு மூடத்தனத்துடன் கூடிய ஆணாதிக்க அறிவிலித்தனமோ!

கலாச்சார்தின் சீரழிவைத்தடுக்க இது இந்த பிற்போக்கு பண்பாடு தேவையாம். எப்படி? புரியவில்லை!. கலாச்சாரச் சீரழிவு என எதை சொல்லுகின்றார்கள்? ஒரு பெண் சுயமாக தன் வாழ்க்கையை முடிவெடுப்பதைத்தானே சீரழிவு என்கின்றார்கள்;. அதாவது தமிழ் பெண்ணின் முடியிலே பிடித்து இழுத்து வந்து செம்மறி ஆடுபோல கழுத்தை நீட்டுவதற்கும், தலையாட்டுவதுக்கும், காட்டியவன் உடன் படுக்கவும் பிள்ளை பெறவும் தான் சீரழிவற்ற கலாச்சாரம் பற்றி பிதற்றுகின்றனர். இதை பாதுகாக்க பெண்ணின் சட்டைக்குள்ளே கழிவு வருகிறதா என விழிப்போடு இருந்து தேடுவது போல் தேடி பார்த்து கொண்டாடினால் சரியாகிவிடும் என்று சமூகத்திற்கு சீரழிவை தடுக்க அறிவு விளக்கம் கொடுக்கின்றனர்.

தமிழ் கலாச்சார விளக்கம் போல் ஐரோப்பியப் பெண்கள் விபச்சாரிகளா? இல்லை அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கும் பண்பாடு, கலாச்சாரம் என்று உண்டு. உயர்ந்த பண்பாட்டை, கலாச்சாரத்தை கொச்சையாக கூறி எம் பெண்களையும், குழந்தைகளையும் வதைக்கும் ஆணாதிக்கத்தை நிறுத்துவது அவசியம். எம்கலாச்சாரத்திலும், அவர்கள் கலாச்சாரத்திலும் நல்லது, கூடாது என பல உண்டு நாம் நல்லவைகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்கவேண்டும். ஆண், பெண்ணை சமமாக மதிக்கப் பழக வேண்டும். இது எம் ஆணாதிக்க கலாச்சாரத்தில்; கிடையவே கிடையாது. ஆண், பெண் குழந்தைக்கு இடையில் உள்ள வேறுபாடு இன விருத்திக்கான உறுப்பு மட்டுமே. இது பெண்ணை அடிமைப்படுத்தும் விலங்கு அல்ல. அடிமை விலங்கை ஏந்திய ஆணாதிக்கம் பெண்ணை சிறை வைக்க வைக்கும் வாதங்கள் கேவலமானது. சொந்தக் குழந்தைகளே தம் பெற்றோருக்கு எதிராக சீரழிவு மற்றும் வக்கிர கலாச்சாரத்தை மறுப்பதும், போராடுவதும் அவர்கள் உரிமையாகும். இதை இந்த ஆணாதிக்க கலாச்சார காவலர்களால் தடுத்து நிறுத்தமுடியாது.

இதை இன்றைய சினிமா பாதுகாக்கும் வடிவமாகின்றது. ஆபாச கவிஞர் வைரமுத்துவின் கவிதையும், சாமத்தியச் சடங்கும் ஆபாசமாக இருப்பதால் ஒத்தும் போகின்றது. அதைப் ||சீவலப்பேரி பாண்டி||; என்ற சினிமா பாடலில் பார்ப்போம்

ஆ:ஷஷஏய்.. மசாலா அரைக்கிற மைனா-

ஓம் மத்தளம் என்ன விலை

மாராப்பு வழுக்கிற மயிலே- ஓம்

மல்லியப்பூ என்ன விலை

நீ பெறந்த தேதியில் அடியே எனக்குப்

புத்தி மாறிப்போச்சு!

நீ சமைஞ்ச தேதியில் அடியே எனக்குபாதித்

தூக்கம் தொலஞ்சி போச்சு!

ஆமா தூக்கம் தொலஞ்சி போச்சு!||

என்ற ஆபாச கவிஞன் வைரமுத்துவின் வரிகள் ஷஷசமைஞ்ச|| தேதி என்பதன் ஊடாக சாமத்தியப்பட்ட நாளையும் அதை ஒட்டி எழும் ஆணாதிக்க உணர்வுகளையும் தனது வக்கிர வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார். இங்கு சாமத்தியத்தை பறைசாற்றி தமிழ் பிற்போக்கு கலாச்சார மானம் காக்க கொண்டாடுவதன் மூலம் எத்தனை இளைஞர்களின் புத்தியையும், தூக்கத்தையும் வைரமுத்து போல் இழந்து, பெண்ணின் மாராப்பு வழுகிவிழ கவிஞர் போல் கனவு கண்டு பெண்களை ஊடறுத்து கற்பழிக்கின்றனர் என்பதற்கு சாட்சிகள் தேவையில்லை.

கவிஞரின் ஆபாச எழுத்தை மாதிரிக்கு கொஞ்சம் பார்ப்போம். ||கிழக்குச் சீமையிலே|| படத்தில் வைரமுத்து

ஆ:ஷஷஎதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வைப்பாட்டி

எக்கச்சக்கம் ஆகிப்போச்சு கணக்கு

பள்ளிக்கூடம் போகையிலே பள்ளப்பட்டி ஓடையிலே

கோக்குமாக்கு ஆகிப்போச்சி எனக்கு

இத குத்துமுன்னு சொன்னா அவன் கிறுக்கு||

என்கிறானே வைரமுத்து. வைப்பாட்டி கவிஞர் மூத்த தமிழ்குடியின் கலாச்சாரத்துக்கு வழி காட்டுகின்றார். ஆண்களே வைப்பாட்டிகளை உருவாக்குங்கள். பெண்களே வைப்பாட்டியாக இருங்கள் என்று வழிகாட்டுகின்றார்.அடுத்த பாட்டு வரிகளைப் பார்ப்போம்

ஷஷபார்வைக்கு ஏத்த இடம்

பாவையே எந்த இடம்?

எந்த இடம் சூரியன் பார்க்கலையோ

அன்பரே அந்த இடம்||

இங்கு தான் சாமத்திய சடங்கையும் வைரமுத்து வழியில் புகுந்து தேடி நியாயப்படுத்துகின்றனர். வாழ்க தமிழ்ப் பண்பாட்டு கவிஞர்! அடுத்து வைரமுத்து வரிகள்

ஷஷஇடுப்பு அடிக்கடி துடிக்குது

றவுக்க எதுக்கடி வெடிக்குது||

ஷஷமாங்கா மாங்கா ரெண்டு மாங்கா

மார்க்கெட்டு போகாத குண்டு மாங்கா||

ஷஷசோளிக்குள் என்ன இருக்கு?

மாhரப்பில் என்ன?||

ஷஷபாவாடை காற்றில் பறந்தால் நீ

என்ன செய்வாய்?

பல பேரின் கண்கள் முறைக்கும்

வேறேன்ன செய்வாய்?

பாவாடை காற்றில் பறந்தால்

பல பேரின் கண்கள் விழுந்தால்

பாவாடை கொண்டு

முகத்தை மூடுவேன்||

என்ற வரிகள் சாமத்தியச் சடங்கு மூலம் பெண் மீது வக்கிரப் பார்வை விழுந்தால், தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தால் முகத்தை மூடுங்கள், கவிஞர் வைரமுத்து பொன் மொழிப்படி. இதைத்தான் மூத்த தமிழ் கலாச்சார பண்பாட்டாளர்கள் செய்யமுடிகின்றது. ஆபாசம் என்பதற்கு கவிஞரின் எழுத்துக்கள் தான் சாட்சி;.

சாமத்தியச் சடங்கை ஆணாதிக்கம் எனச் சொல்லும் போது, இல்லை இல்லை அது ஆணாதிக்கம் அல்ல என்று சொல்லியபடி ஆணாதிக்கத்துக்கு வக்காளத்து வாங்குவதே ஆபாசம்.

இந்த ஆணாதிக்கத்தை எப்படி, எங்கே, எதற்குள் தேடிச் செய்கின்றனர் என கொஞ்சம் விலாவாரியாக பேச வெளிக்கிடவே ஆபாசம்; என கூறி மூடிவிட முயல்கின்றனர்.

ஐயா! உங்கள் ஆண், பெண் குழந்தைகள், அக்காவுக்கு அல்லது தங்கச்சிக்கு என்ன நடந்தது எனக் கேட்டால் தமிழ் கலாச்சார செம்மல்களே என்ன கூறமுடியும்!. நீஙகள் வாய் மூடிக் கொண்டிரு என்று கூறுவீர்களோ? அல்லது உனக்கு தெரியத் தேவை இல்லை என்று கூறி அதட்டுவீர்களோ? பாடசாலையில், அல்லது புலம்பெயர் நாடுகளில் வாழும் மற்ற இனத்தவர் கேட்டால் என்ன சொல்வீர்கள்? விளக்குங்கள் கொஞ்சம் விலாவாரியாக.

தரக்குறைவு பற்றி ஒப்பாரி வைத்த படி ஆபாசத்திலே உழலுபவர்கள் எழுதுபவர்கள்தான். இவர்கள் வீடியோவிலும் தொலை காட்சியிலும், சினிமாவிலும் பார்க்கும் ஆபாச (தமிழ் உட்பட) காட்சிகள், வீட்டிலும் போகும் இடம் எல்லாம் கேட்கும் சினிமா பாடல்கள், பார்க்கும் வண்ணப்பட செய்திப் பத்திரிகைள் என எங்கும் ஆபாசமும், தரக்குறைவுதான் இந்த மாதிரி எழுதும் தமிழனின் ஆதாரப் பாண்பாடு. மாதிரிக்கு வாலியின் பாடல் வரிகளைப் பார்ப்போம்.

ஷஷகதவச் சாத்து கதவச் சாத்து மாமா

நான் கன்னி கழிய வேணுமையா ஆமா

கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய

நீ கட்ட வேணும்||

இது போன்ற பாட்டுகள், பாடல் வரிகள், காட்சிகள், செய்திப் படங்கள் தான் தமிழனின் பண்பாடாகிய வெற்றியில் தான் சந்தையில் இதன் மவுசகின்றது. இதன் பண்பாட்டால்தான் சாமத்தியச் சடங்கு நியாயப்படுத்தப்படுகின

Chandravathanaa hat gesagt…


பரணீ, வசந்தன்


உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Tamilcircle
நீங்கள் றயாகரனாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரையை இங்கு தந்ததற்கு நன்றி.
உங்கள் தளத்திலும் நிறையக் கட்டுரைகள் பார்த்தேன்.
ஒரு சிலதை வாசித்தும் பார்த்தேன். மிகுதியையும் நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்ற எண்ணம். அவைகளை என் பார்வைக்குத் தந்ததற்கு மிகவும் நன்றி.

நீங்கள் முன்னர் சக்தியில் நிதர்சினி சம்பந்தமாக எழுதிய றயாகரனா...?

தமிழரங்கம் hat gesagt…

ஆம் நான் இரயாகரன் தான். நிதர்சனி பற்றியும் நான் எழுதியுள்ளேள்; எனது இணையத்திலும் அது உள்ளது.

Chandravathanaa hat gesagt…

நன்றி இரயாகரன்.
உங்கள் பெயரை சரியாகச் சொல்கிறோனோ தெரியவில்லை.
உங்கள் பதிவில் வாசிப்பதற்கு நிறைய இருக்கின்றன.
வாசித்து விட்டு முடிந்தால் என் கருத்துக்களையும் சொல்கிறேன்.

Haran hat gesagt…

//ஆனால் நீண்ட கால ஓட்டத்தில், காரணங்கள் திரிபு பட்டது மட்டுமல்லாது காரியங்களும் ஆணாதிக்க மேலோங்கலில் மிகுந்ததொரு சுயநல நோக்குடன் கட்டாயமாகத் திரிக்கப் பட்டு, இன்றைய கால கட்டத்தில் ஏன்? எதற்கு? என்ற சிந்தனைகளெதுவுமின்றி, உண்மையான, தேவையான விடயங்கள் புறக்கணிக்கப் பட்டு, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் பொய்யான விடயங்கள் தொடர்கின்றன//

நிச்சயமாக... இவ் விடயம், சாமத்தியச் சடங்கிற்கு மட்டுமல்லாது பல சடங்கு/ சமய வழிபாடு.... மற்றும் கலாச்சாரம் என்ற போர்வையில் செய்யப்படும் விடயங்களில் காணப்படுகின்றன. நான் சிறு வயதில் இது பற்றி வயதானவர்களிடம் கேள்வி கேட்டால்... அவர்களிடம் இருந்து வரும் பதில்... நீ சின்னப் பொடியன்... அல்லது... அது அப்படித் தான்... இல்லை இன்னும் எனது வாயைப் பொத்த வேண்டும் எனின்... அதெல்லாம் உனக்கு என்னத்துக்கு... சொன்னதை செய் பாப்பம் என்பதுமாக எமது காலங்கள்... எவை எதற்கு என்று அறியாமலும் அறிவிக்கப் படாமலும் வாழ்ந்து விட்டோம்... இனி நமது இளைய சமூகத்திற்காவது அவற்றை எடுத்துக் கூறி வளர்க்க வேண்டும்.

பெண்களின் மனோ நிலை பற்றி எழுதி இருந்தீர்கள்... அது நூற்றிற்கு நூறு வெளி நாடுகளில் உண்மை. ஊரில் எப்படி என எனக்குத் தெரியாது... ஆனால் இங்கு பல பெண்களுடனும் பேசியதில் தமிழ் பெண்கள் கூறுவது, தமக்கு இதைத் தம் பெற்றோர் தம்பட்டம் அடித்து வெளியே கூறுவது உடல் கூசும் விடயமாகவும் வெளியில் தலை தூக்கிப் பார்க்க முடியாமல் வெட்கத்தினை (தாழ்வு மனப்பாங்கு??) உண்டு பண்ணுவதாகவும் இருப்பதாக பெண்கள் கூறுகின்றார்கள்.